திருக்குறள் மொழிபெயர்ப்பில் பக்தி உள்நோக்கத்துடன் நீக்கம்: கவர்னர் ரவி!

ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிப்பெயர்ப்பில் பக்தி என்ற ஆன்மா வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக கவர்னர் ரவி குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள தமிழ் கல்விக்கழகம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தரை அடி உயரமும், ஆயிரத்து 500 கிலோ எடையும் கொண்ட இந்த திருவள்ளுவர் சிலையை, வி.ஜி.பி உலக தமிழ் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் வழங்கினார். இந்த திருவள்ளுவர் சிலையை தமிழக கவர்னர் ரவி திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:-

இந்த விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நமது வருங்கால தூண்களான மாணவர்களையும், அவர்களை உருவாக்கிய ஆசிரியர்களையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். டெல்லி தமிழ் கல்விக்கழக பள்ளிகளின் நூற்றாண்டு விழா காணுகிறது, அதற்கு வாழ்த்துகளையும், மேன்மேலும் வளரவும் வாழ்த்துகிறேன்.

தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியம் மிக மிகப் பழமையானது. இப்படியான பழமையான மொழியில் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்னரே யோக கலையின் முக்கியத்துவத்தைத் தெரிவித்துள்ளனர். ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஒரு சந்தையாகவும், கலாச்சாரம் இல்லாத நாடாகக் காட்ட முயன்றனர். ஆனால், இந்தியா அவ்வாறு இல்லை, இந்தியா கலாச்சாரம் நிறைந்த, பண்பட்ட சமூகமாக அப்போதே இருந்துள்ளது.

அதேபோல இந்திய நூல்களின் மொழிபெயர்ப்பாளர்களின் உள்நோக்கம் கொண்ட மொழிபெயர்ப்பை விடுத்து உண்மையான பொருட்களை வெளிக்கொணர வேண்டும். திருவள்ளுவர் நமது பிரபஞ்சத்தின் ஒரு விடிவெள்ளி. தற்போது திருக்குறள் என்பது ஒரு கருத்துரை, வாழ்வியல் அடங்கிய ஒரு புத்தகமாகச் சுருங்கிவிட்டதாகக் கருதுகிறேன். ஆனால் திருக்குறள் என்பது அதற்கும் மேலானது. திருக்குறள் என்பது பக்தி, வாழ்வியல், பிரபஞ்சம் என அனைத்தையும் உள்ளடக்கியது. தமிழக கவர்னராக நான் பதவியேற்ற பின்னர் எனக்குத் திருக்குறள் புத்தகம் அதிக அளவில் பரிசாகக் கிடைத்தது. அதில் பெரும்பாலானது ஜி.யு.போப் என்பவரின் ஆங்கில மொழிபெயர்ப்பு. ஜி.யு.போப்பின் மொழிபெயர்ப்பு தான் சிறந்த திருக்குறள் மொழிபெயர்ப்பு. ஆனால் இந்த மொழிபெயர்ப்பில் பக்தி என்ற ஆன்மா வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் நீக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்புகளில் ஆதிபகவன் என்பதையே தவிர்த்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.