அதிமுக அலுவலகம் தாக்கப்பட்ட வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம்!

அதிமுக அலுவலகம் தாக்கப்பட்ட வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ராயப்பேட்டையில் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு ஓபிஎஸ் சென்றார். அந்த சமயத்தில், ஓ.பன்னீா்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளா்கள் இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையாக மாறியது. கட்சி அலுவலகத்தை உடைத்து உள்ளே சென்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள், கட்சி அலுவலகத்தை கைப்பற்றினர். இதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினா் சீல் வைத்தனர். இதனை அகற்றக் கோரி ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை உடனடியாக எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. அத்துடன், ஒரு மாதத்திற்கு பிறகுதான் தலைமை கழகத்திற்குள் தொண்டர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஒபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

முன்னதாக, சீல் அகற்றப்பட்டு இபிஎஸ் தரப்பினர் அதிமுக அலுவலகத்தில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த பரிசுப்பொருள்களைக் காணவில்லை என அதிமுக எம்.பி.யும், இபிஎஸ் ஆதரவாளருமான சிவி சண்முகம் குற்றம் சாட்டினார். இதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். முக்கிய ஆவணங்களை திருடு போயுள்ளதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, ராயப்பேட்டை காவல் நிலைய போலீசார் எந்த வித நடவடிக்கை எடுக்காததால், உடனடியாக இந்த வழக்கை சிபிஐ அல்லது சுதந்திரமான விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தபால் மூலமாக புகார் அளித்த சி.வி.சண்முகம், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். அதில், ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்குள் புகுந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாக அளித்த புகாரில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவும் செய்யப்பட்டதாக குறிபிட்டுள்ளார். புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கமால் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுவதாகவும் அவர் தனது மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.

அந்த வழக்கு மீது விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், ஜூலை 11ஆம் தேதி அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டதை சிபிஐ விசாரிக்கக் கோரியது குறித்து விளக்கம் அளிக்க சென்னை காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம், ஆவணங்கள் சூறை தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான 4 வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக கூறி, அந்த உத்தரவு நகலை தாக்கல் செய்தார். இதைபதிவு செய்த நீதிபதி, வழக்குகள் தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது குறித்து தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் மீது 7 பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவக வன்முறை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட 7 பேர் மீது பயங்கர ஆயுதங்களுடன் கலகம் செய்ய செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் 7 பிரிவுகளின் கீழ் சென்னை ராயப்பேட்டை போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.