இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் மீது இந்து முன்னணி போலீசில் புகார்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் என்ற சமூக விரோதியை கைது செய்ய வேண்டும் என்று பாஜக ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்த நிலையில், பாரத் இந்து முன்னணியும் முத்தரசன் மீது போலீசில் புகார் தந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்லவில்லை. இது ஒரு பிரச்சனையாக வெடித்தது. குறிப்பாக பாஜக தலைவர்கள் இதை பற்றி கேள்வி எழுப்பினார்கள்.
இந்நிலையில் திமுக சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பாரிமுனையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது:-

அமைச்சர் சேகர்பாபு கடவுள் நம்பிக்கை உடையவர். நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். ஆனால் எங்களுக்குள் நட்பு உள்ளது. கணேசனின் தாயாரான பார்வதியம்மாள் பல மாதங்களாக, பல வருடங்களாக குளிக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில் ஒருநாள் கங்கைக்கு குளிக்க போயிருக்கிறார். குளிக்கும்போது ஏராளமான அழுக்கு வந்திருக்கிறது. அந்த அழுக்கை உருட்டி வைத்திருக்கிறார். அதுதான் விநாயகராகி விட்டது. குளித்து முடித்த பிறகு அந்த அழுக்கை தண்ணீரில் கரைத்து விட்டிருக்கிறார். இப்படித்தான் வரலாற்றில் கூறுகிறது. அதனால், அந்த அழுக்கை போய் நாங்கள் ஏன் கும்பிட வேண்டும்? அந்த அழுக்குக்கு எதற்காக நாங்கள் வாழ்த்து சொல்ல வேண்டும். இவ்வாறு முத்தரசன் பேசியிருந்தார்.

இந்த கருத்திற்கும் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கொந்தளித்து ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார். அதில், “விநாயகரை இழிவுபடுத்தி பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் கைது செய்யப்பட வேண்டும். மத துவேஷங்களை செய்வோர் மீது நடவடிக்கை எடுப்பதாக சொன்ன தமிழக முதலமைச்சர், திராவிட முன்னேற்ற கழக அரசு மதசார்பற்றது என்பது உண்மையென்றால், தாமதிக்காமல் தலைவர் என்ற போர்வையில் இருக்கும் வாய்க்கொழுப்பெடுத்த, அநாகரீக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் என்ற சமூக விரோதியை தமிழக காவல்துறை உடனடியாக கைது செய்ய உத்தரவிட வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், முத்தரசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை பாரிமுனையை சேர்ந்தவர் டில்லிபாபு. பாரத் ஹிந்து முன்னணி மாநில செயலரான இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தந்துள்ளார். அதில், “சென்னையில் அரசு கல்லுாரி ஒன்றில், திமுக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன், விநாயகர் மற்றும் பார்வதி குறித்து அவதுாறாக பேசியுள்ளார். இது, ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளது. முத்தரசன் மீது, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.