சிறையில் சஞ்சய் ராவத்தை சந்திக்க உத்தவ் தாக்கரேவுக்கு அனுமதி மறுப்பு!

மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்தை சந்திக்க உத்தவ் தாக்கரேவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கமானவர் சஞ்சய் ராவத். சிவசேனாவின் தலைமை செய்தி தொடர்பாளர் மற்றும் மாநிலங்களவை எம்.பி.யான இவர், பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்து வந்தார். சமீபத்தில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவுக்கு எதிராக கட்சியை உடைத்த போதும், அதிருப்தி அணியினரை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். இந்தநிலையில் சஞ்சய் ராவத் பத்ராசால் குடிசை சீரமைப்பு மோசடியில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த மாதம் 1-ந் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பத்ரா சால் மோசடியில் கிடைத்த சட்டவிரோத பணத்தின் ஒரு பகுதி சஞ்சய் ராவத்தின் மனைவி, கூட்டாளிகளுக்கும் வழங்கப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது. மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் சஞ்சய் ராவத் அடைக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் அவர் நேற்று மும்பையில் உள்ள சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். சிறப்பு கோர்ட்டு சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவலை மேலும் 14 (வருகிற 19-ந் தேதி வரை) நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது. இதையடுத்து அவர் மீண்டும் ஆர்தர்ரோடு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சய் ராவத்தை சந்திக்க உத்தவ் தாக்கரேவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலர் அறையில் வைத்து சஞ்சய் ராவத்தை சந்திக்க உத்தவ் தாக்கரே அனுமதி கோரியதாகவும் ஆனால், நீதிமன்ற அனுமதி பெற்று சஞ்சய் ராவத்தை சந்திக்குமாறு சிறை அதிகாரிகள் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அனுமதி மறுத்த சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ராவத்தை சந்திக்க நீதிமன்றத்தில் தான் அனுமதி கேட்க வேண்டும். சிறைத்துறை அதிகாரி அறையில் அவரை சந்திக்க முடியாது. சாதாரண கைதிகள் உறவினர்களை சந்திப்பது போல தான் அவர்கள் சந்திக்க முடியும். அதற்கும் நீதிமன்ற அனுமதி பெற வேண்டும். உத்தவ் தாக்கரே, எழுத்துப்பூர்வமாக அனுமதி கேட்கவில்லை என்றனர்.