தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்: உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி!

தியாகி இம்மானுவேல் சேகரனின் 65வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாட்டில் தியாகி இம்மானுவேல் சேகரனின் 65வது நினைவு தினம்நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். இதனால் மாவட்டம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கெனவே மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திமுக சார்பாக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நவாஸ் கனி உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களும், எம்பி-க்களும் அஞ்சலி செலுத்தினர். அவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக பொறுப்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோல் அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் அஞ்சலி செலுத்தினார். இதனைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் அஞ்சலி செலுத்தினர்.