இன்னும் 10 நாட்களில் புதிய அரசியல் கட்சி: குலாம் நபி ஆசாத்

காங்கிரஸ் கட்சியை விட்டு கடந்த மாதம் 26ம் தேதி விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், இன்னும் 10 நாட்களில் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

பாரமுல்லா பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் குலாம் நபி ஆசாத் பேசியதாவது:-

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370ஐ இனியும் மீட்டெடுக்க முடியாது. 370ஐ மீண்டும் கொண்டு வர நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. இதை வைத்து மக்களைச் சுரண்டும் கட்சிகளை நான் அனுமதிக்க மாட்டேன். சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பேன் என்று மக்களை ஏமாற்றவும் எனக்கு விருப்பம் இல்லை.

இதுவரை நடந்த அரசியல் சுரண்டல் காஷ்மீரில் ஒரு லட்சம் பேரைக் கொன்று, ஐந்து லட்சம் குழந்தைகளை அனாதைகளாக்கியுள்ளது. நான் பொய் சொல்லி வாக்குகளைக் கேட்க மாட்டேன். வாக்கு கிடைக்காமல் போனாலும் சரி எதை என்னால் செய்ய முடியுமோ அதைப் பற்றி மட்டுமே பேசுவேன். பொய்யான வாக்குறுதிகள் குறித்து நான் பேசமாட்டேன், 10 நாட்களில் புதிய கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகும். காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து, வேலைவாய்ப்புகள், நில உரிமைகளை மீட்க மக்கள் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.