அதிமுகவிற்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை: ஜெயக்குமார்

அதிமுகவிற்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே அதிமுக தலைமை அலுவலகத்தில் பன்னீர் செல்வம் படத்தை நீக்கியது சரிதான் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் 114ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு அதிமுக சார்பில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அண்ணாவை ஒருமையில் திட்டி அவரது பிறப்பை கேலி செய்து காங்கிரஸ்காரர்கள் சுவரில் எழுதினார்கள். அண்ணா தனது தம்பிகளை அமைதிப்படுத்தி மெழுகுவர்த்தி வெளிச்சம் காட்டி அதை மக்களுக்கு தெரியப்படுத்துமாறு கூறினார். அண்ணா வழியில் ஆட்சி நடத்துவதாக கூறும் விடியா அரசு அரசியலில் நாகரிகம் பண்பாடு இன்றி எதிர்க்கட்சிகளை ஒடுக்க, புழுதிவாரி தூற்றி, நாகரிகமற்ற அரசியலை செய்கிறது. அண்ணா வழியில் வந்ததாக சொல்வதற்கு திமுகவிற்கு அருகதை இல்லை.

திமுகவினர் கம்பி கட்டும் வேலையை நன்றாக செய்கின்றனர். திட்டங்களுக்கான பெயர் சூட்டு விழா மட்டுமே பிரமாண்டமாக நடக்கிறது. எனது துறைக்கு இயக்குநராக இருந்தவர் தற்போதைய தலைமை செயலாளர் இறையன்பு. எனவே அவரது கைவண்ணம் எனக்கு தெரியும். ஸ்டாலின் பாடுவது எல்லாம் அவரது கைவண்ணம்தான். அவர் எழுதிக் கொடுத்தைதை ஸ்டாலின் பேசுகிறார்.

குழைந்தைகளுடன் சாப்பிட ஸ்டாலினுக்கு புது பிளேட் , ஸ்பூன் கொடுத்தார்கள். ஆனால் இரண்டு வாய் சாப்பிட்டு விட்டு தட்டிலேயே கை கழுவிவிட்டார், விவசாயிகளை அவமதிக்கும் விதமாக தட்டில் கை கழுவிவிட்டார் ஸ்டாலின்.

நரிக்குறவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க முதல்முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி குரல் கொடுத்தவர் ஜெயலலிதா. ஆனால் திமுக கோயபல்ஸ் பிரசாரம் போல தாங்கள்தான் காரணம் என கூறுகின்றனர். மீனவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியது அதிமுக , இன்றுவரை திமுக அதற்கு குரல் கொடுக்கவில்லை. மாதம்தோறும் ஆயிரம் ரூபாய், பழைய ஓய்வூதியம், நீட் உள்ளிட்ட தேர்தல் பிரசாரங்களை திமுக இன்னும் நிறைவேற்றவில்லை. நீட் மசோதாவிற்கு ஒப்புதல் பெற திமுகவிற்கு வக்கும், துப்பும் இல்லை. ஒற்றைத் தலைமையுடன் வலுமிக்க இயக்கமாக அதிமுக இருக்கிறது. ஓபிஎஸ் பண்ருட்டியார் உட்பட யாரை வேண்டுமனால் சந்திக்கலாம். ஆனால் பலனளிக்காது.

ஜெயலலிதாவை பார்ப்பது போல மக்கள் தன்னை பார்ப்பதாக சசிகலா கூறுவது தவறு. சசிகலாவிற்கு நகைச்சுவை உணர்வு அதிகம். சிரிக்காமல் ஜோக் அடிப்பவர் சசிகலா. மடுவுக்கும் மலைக்குமான வித்தியாசம்தான் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும். கட்சிக்கும் ஓபிஎஸ்க்கும் சம்பந்தம் இல்லை. எனவே அதிமுக அலுவலகத்தில் பன்னீர்ச்செல்வம் படத்தை நீக்கியது சரிதான். இந்த ஆட்சியில் ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் இருவரும் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதில் கெட்டிக்காரர்கள். மருத்துவமனைகளில் பிபி, சுகர் மாத்திரை இல்லை. ப்ளூ காய்ச்சலால் சென்னை புறநகர் பகுதி அதிகமாக பாதிக்கப்பட்ட போதும் கட்டுப்படுத்த அரசு முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.