எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க தடை இல்லை: உயர்நீதிமன்றம்

ரூ4,800 கோடி நெடுஞ்சாலைத் துறை டெண்டர் ஊழல் முறைகேடு வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக நெடுஞ்சாலை துறையில் டெண்டர்களில் ரூ4,800 கோடி முறைகேடு நடந்தது என்பது திமுகவின் ஆர்.எஸ்.பாரதி 2018-ல் தொடர்ந்த வழக்கு. இந்த வழக்கில் விரைவாக நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி மனுத் தாக்கல் செய்திருந்தார். அதேநேரத்தில் இந்த வழக்கில் தற்போதைய நிலையே அதாவது லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் கட்ட விசாரணை அறிக்கை மீது நடவடிக்கை எடுக்காத தற்போது நிலையே தொடர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பும் ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி இளந்திரையன் நேற்று விசாரித்தார். நேற்றைய விசாரணையில், நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க தடை இல்லை. இவ்வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல் நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிராகரித்தார்.