தமிழகத்தில் நான்கு முதலமைச்சர்கள் உள்ளனர்: எடப்பாடி பழனிசாமி!

திமுக ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த முதல் போனஸ் சொத்து வரி உயர்வு தான் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தமிழக அரசின் மின் கட்டண உயர்வுக்கு எதிராக அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

தி.மு.க அரசின் 15 மாத ஆட்சியில் தமிழக மக்களுக்கு துளியும் எந்த நன்மையும் கிடைக்கவில்லை. துன்பமே கிடைத்துள்ளது. கமிஷன், கலெக்சன், கரப்ஷன் தான் திமுக அரசின் திராவிட மாடல். வரி உயர்வை மக்கள் தலைமையில் சுமத்தியது தான் திராவிட மாடல். சொத்து வரி உயர்வு தான் வாக்களித்த தமிழக மக்களுக்கு ஸ்டாலின் கொடுத்த முதல் போனஸ்.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களால் மக்கள் பல நன்மைகளை பெற்றனர். கொரோனா தொற்றில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கும் போது, மக்களின் தலையில் இவ்வளவு பெரிய சுமையை சுமத்துவது நியாயமா? மக்களின் வேதனையை புரிந்துகொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.

திமுக அரசு ஒரு குடும்ப ஆட்சி. ஒரு மாநிலத்திற்கு ஒரு முதலமைச்சர் தான் இருப்பார்கள். தமிழகத்தில் நான்கு முதலமைச்சர்கள் உள்ளனர். குடும்பத்தின் அதிகார மையமாக தமிழகம் மாறியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அவரது குடும்பத்தினர் தான் இயக்கி வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் பொம்மை முதலமைச்சராக காட்சியளித்துக் கொண்டிருக்கிறார். 7.5% உள் ஒதுக்கீடு மூலம் இந்தாண்டு 569 மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றியது அதிமுக தான். தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறிதான். மக்களின் எண்ணங்களையும், துன்பங்களையும் புரிந்து கொள்ள இயலாத அரசு திமுக அரசு. இவ்வாறு அவர் பேசினார்.