குஜராத் சட்டப்பேரவையில் 14 காங்கிரஸ் எல்எல்ஏக்கள் இடைநீக்கம்!

குஜராத் சட்டப்பேரவையில் அத்துமீறி நடந்துகொண்ட சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 14 பேர் நாள் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் சட்டப்பேரவை நடவடிக்கைகள் தொடங்கியவுடன், எதிர்க்கட்சித் தலைவர் சுக்ராம் ரத்வா, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், விவசாயிகள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் தொடர்பான பிரச்னைகள் குறித்து அரை மணி நேரம் சிறப்பு விவாதம் நடத்தவேண்டும் என்று கோரினார்.

சாபநாயகர் நிமாபென் ஆச்சார்யா, ரத்வாவின் கோரிக்கையை நிராகரித்ததால், மேவானி மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பேரவையில் சபாநாயகர் அருகே வந்து முழக்கங்களை எழுப்பினர். ஊழியர்களுக்கு நீதி வழங்குங்கள், வன ஊழியர்களுக்கும், முன்னாள் படை வீரர்களுக்கு நீதி வழங்குங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். அனைத்து துறைகளிலும் உள்ள பல ஊழியர்கள், நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்காகப் போராடும்போது, பேரவையில் விவாதம் நடத்த பாஜக ஏன் தயாராக இல்லை? என்று காங்கிரஸ் தொடர் முழக்கங்களை எழுப்பினர்.

சாபநாயகர் உத்தரவுப்படி எதிர்க்கட்சி எல்எம்ஏக்கள் தங்கள் இருக்கைகளுக்குச் செல்ல மறுத்ததால், குஜராத் சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சர் ராஜேந்திர திரிவேதி இருக்கையில் அமர மறுத்த எம்எல்ஏக்கள் 14 பேர் நாள் முழுவதும் இடைநீக்கம் செய்தார். அவர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.