முதல்வர் ஸ்டாலின் விளம்பர ஆட்சி செய்கிறார்: ராஜேந்திர பாலாஜி!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாள்தோறும் 4 ஷூட்டிங் நடத்தி விளம்பர ஆட்சி செய்வதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பேரறிஞர் அண்ணாவின் 114-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:

அண்ணாவின் பெயரை குப்பையில் போட்டுவிட்டு அண்ணாவின் புகழை குப்பையில் போட்டுவிட்டு தன்னுடைய குடும்பம் வாழ்வதற்காக கலைஞர் திமுகவை பயன்படுத்தினார். கலைஞரும் தற்போது உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் திமுகவுக்கு வாக்களித்த மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை. அதிமுகவின் பத்து ஆண்டுகால பல நல்ல திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது. அரசாங்கத்திற்கு செல்லக்கூடிய வருமானத்தை தன்னுடைய கஜானாவிற்கு திருப்பும் அமைச்சர்களாக திமுக அமைச்சர்கள் செயல்பட்டு வருகின்றனர். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வந்த பிறகு தினம்தோறும் 4 ஷூட்டிங் நடக்கிறது. எந்தத் திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை.

காலையில் சிற்றுண்டி என ஆரம்பித்த திமுக அரசு அனைத்து மாணவர்களுக்கும் சிற்றுண்டி வழங்க வேண்டும். தற்போது உள்ள முதலமைச்சரின் ஆட்சி விளம்பர ஆட்சி, விளம்பரத்தால் உயர்ந்தவர் வாழ்க்கை நிரந்தரமாகாது. எழுதாத பேனா, மையில்லாத பேனாவிற்கு ரூ.80 கோடி ஒதுக்கும் திமுக அரசு நீட் தேர்விற்கு விலக்கு அளிப்பதற்கு மத்திய அரசிடம் முயற்சிக்கவில்லை. ஆவின் பாலின் தரம் தற்போது குறைந்துள்ளது. அனைத்து பொருட்களிலும் கலப்படம் அதிகமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.