நாடே இல்லாத ‘ராஜாவுக்கு’ 9 மந்திரிகள்: ஜெயக்குமார்!

அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் நியமித்தது குறித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘நாடே இல்லாத ராஜாவுக்கு 9 மந்திரிகள் போல’ என விமர்சித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் பேசிவந்த அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுக அரசியல் ஆலோசகராக நியமித்து அறிக்கை வெளியிட்டார் ஓ.பன்னீர்செல்வம். இதையடுத்து, கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாக பண்ருட்டி ராமச்சந்திரன் கழக அமைப்புச் செயலாளர் முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் வரை அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில் சி.பா.ஆதித்தனாரின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் சி.பா.ஆதித்தனாருக்கு சிலை வைக்க வேண்டும் என உத்தரவிட்டவர் எம்ஜிஆர் தான், ஜெயலலிதா அவர்கள் தான் ஆதித்தனாரின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்தார்” என்றார்.

அதிமுக ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் நியமித்துள்ளது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், “கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். நாடே இல்லாத ராஜாவுக்கு 9 மந்திரிகள் என்று சொல்வதைப் போலத்தான் பன்னீர்செல்வத்தின் செயல்கள் இருக்கிறது. அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வத்திற்கே பதவி இல்லை. அவர் மற்றவர்களுக்கு பதவி கொடுக்கிறார்” என விமர்சித்தார்.

கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், “ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் இருந்ததாகத் தானே ஜேசிடி பிரபாகர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார். காவல்துறையினர் யார் வீட்டிற்கு சென்றிருக்க வேண்டும்? ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். ஓபிஎஸ் வீட்டுக்கு ஏன் போகவில்லை? அப்படி என்றால் ஓபிஎஸ்ஸும் திமுகவும் கைகோர்த்து செயல்படுகின்றனர்” என்றார்.

மேலும் பேசிய அவர், திமுகவின் மாவட்ட அமைப்புகளுக்கான மனுத்தாக்கல் 700 பேர் கூட வரவில்லை, அதில் எத்தனை பேர் ஆதிதிராவிடர் பழங்குடியினர் என்ற பட்டியலை வெளியிட வேண்டும், திமுகவில் ஆதிக்க சாதியினருக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஆனால், அவர்கள் ஊருக்கு தான் உபதேசம் செய்வார்கள் எனத் தெரிவித்தார்.

மேலும், தலைவர்களின் சிலைக்கு உடனடியாக இந்த அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும், திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லும் இவர்கள், சமூக நீதி என்று சொல்லும் இவர்களின் ஆட்சியில்தான் தலைவர்களின் சிலைகளுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலும் என இரட்டை வேடம் போடக் கூடியவர்கள் திமுகவினர் என விமர்சித்தார்.