சிவசேனா சின்னம், கட்சி தொடர்பான வழக்கு: உத்தவ் தாக்கரே மனு தள்ளுபடி!

சிவசேனாவின் கட்சி மற்றும் சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கில் உத்தவ் தாக்கரே தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த 2019- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து சிவசேனா போட்டியிட்டது. பாஜக 106 இடங்களிலும் சிவசேனா 55 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதில் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் பாஜக – சிவசேனா இடையே மோதல் ஏற்பட்டது. இரு கட்சிகளும் விடாப்படியாய் இருந்தால், இந்தக் கூட்டணி உடைந்தது. அதோடு யாரும் எதிர்பாராத வகையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகாவிகாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி ஆட்சி நடத்தி வந்தார். இதனால், பாஜக எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் சிவசேனா மூத்த தலைவரும் உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவருமான ஏக்நாத் ஷிண்டே திடீரென உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.
மேலும் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 39 பேருடன் வெளிமாநிலத்தில் முகாம் இட்டார். இதனால், பெரும்பான்மை இழந்த உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, பாஜக ஆதரவுடன் சிவசேனா அதிருப்தி அணியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்றார்.

சிவசேனா கட்சி இரு அணிகளாக உடைந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே தங்களுக்குதான் கட்சியும் சின்னம் வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் முறையிட்டார். ஆனால், அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் மனு விசாரணையில் இருப்பதால், இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கும் வரை தேர்தல் ஆணையம், ஏக்நாத் ஷிண்டேவின் கோரிக்கையை பரிசீலிக்க கூடாது என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே மனு தாக்கல் செய்தார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இன்று நாள் முழுவதும் இந்த வழக்கில் இரு தரப்பும் காரசார வாதங்களை முன்வைத்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், யார் உண்மையான சிவசேனா என்று தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க எந்த தடையும் இல்லை என்று உத்தரவிட்டதோடு உத்தவ் தாக்கரே தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதன் மூலம் ஏக்நாத் ஷிண்டேவின் மனு மீது விரைவில் தேர்தல் ஆணையம் முடிவை எடுக்கும் என்று தெரிகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு உத்தவ் தாக்கரே தரப்புக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி சிவசேனா அணியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.