மனித கழிவை அள்ள மனிதர்களை பயன்படுத்தினால் ஆட்சியர்கள் பணியிடை நீக்கம்: உயர் நீதிமன்றம்!

மனிதக் கழிவுகளை அகற்ற மனிதர்களைப் பயன்படுத்தினால் மாவட்ட ஆட்சியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என உயர் நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அய்யா என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இந்தியாவில் துப்புரவாளர்கள் கையால் மலம் அள்ளும் நிலை தொடர்ந்து வருகிறது. பாதாள சாக்கடைகளில் இறங்கி துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றும் சமயங்களில் விஷவாயு தாக்கி, அவர்கள் பரிதாபமாக இறக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டே இருக்கின்றன. துப்புரவு தொழிலாளர்கள் கையால் மலம் அள்ளுவதை தடுக்கும் வகையில் கடந்த 2013-ம் ஆண்டு மறுவாழ்வுச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கையால் மலம் அள்ளுவது முழுவதுமாக தடுக்கப்படவில்லை. இந்த சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அரசுகளை அறிவுறுத்தி வருகிறது.

மனிதர்கள் மலம் அள்ளுவதை தடுக்க ரோபோ எந்திரங்களை பயன்படுத்தலாம். இதன் மூலம் பாதாள சாக்கடைகளில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் இறப்பது தடுக்கப்படும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே எனது மனுவின் அடிப்படையில் மனிதர்கள் மலம் அள்ளுவதை தடுக்க ரோபோ எந்திரங்களை பயன்படுத்தவும், துப்புரவு தொழிலாளர்கள் மறுவாழ்வு சட்டத்தை கடுமையாக அமல்படுத்தவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு மதுரை ஐகோர்ட் கிளையில் இன்று நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் பாதாள சாக்கடைகளில் இறங்கி தொழிலாளர்கள் பணியாற்றுவது தொடர்பான புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த புகைப்படங்களைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் இவை எங்கே எடுக்கப்பட்டவை என கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், சென்னை, திருவண்ணாமலை ஆகிய நகரங்களில் எடுக்கப்பட்டவை என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் சமர்ப்பித்த புகைப்படங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரித்தனர். மேலும் மனிதர்கள் மலம் அள்ளுவதை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கையை அரசு தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.