பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முன்னிலை: திரெளபதி முா்மு!

பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முன்னிலை நாடாக விளங்குவதாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

இந்திய வெளியுறவுத் துறையில் பயிற்சி பெற்ற அதிகாரிகள் குழுவினரை (2021 பிரிவு) குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு நேற்று சந்தித்தாா். குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது அதிகாரிகள் மத்தியில் குடியரசுத் தலைவா் பேசியதாவது:-

பொருளாதார செயல்திறன் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில், இந்தியா வலுவான நிலைக்கு முன்னேறி வருகிறது. பொருளாதாரத்தில் முன்னேறிய உலக நாடுகள் பெருந்தொற்றின் தாக்கத்திலிருந்து மீள்வதற்கு இன்னும் முயற்சி செய்து கொண்டுள்ள நிலையில், இந்தியா மீண்டெழுந்து முன்னேறத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இந்தியப் பொருளாதாரம் வேகமான வளா்ச்சி விகிதத்தைப் பதிவு செய்து வருகிறது.

உலக பொருளாதார மீட்சி, இந்தியாவையே சாா்ந்துள்ளது. உலக அரங்கில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு மற்றொரு காரணம் அதன் அணுகுமுறை. உலக நாடுகளுடனான நமது உறவுகள், மரபு சாா்ந்த நமது மதிப்புகளால் நிா்வகிக்கப்படுகின்றன. இந்தியாவின் பெருமைமிகு நாகரிகம், பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றை உலக நாடுகளில் முன்னிறுத்த வெளியுறவுத் துறை உங்களுக்கு தனித்துவமான ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.

அண்மைக் காலங்களாக பிற நாடுகளுடனான இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகளில் புதிய முயற்சிகள் காணப்படுவதால், உலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்கி வருகின்றன. உலகளாவிய பல்வேறு அமைப்புகளில் இந்தியா தீா்க்கமான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளது. பல்வேறு துறைகளில் இந்தியாவின் தலைமைத்துவம் சவால்களாக உள்ளது. தெற்குப் பகுதிகளின் வளா்ச்சியில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முன்னிலை நாடாக விளங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.