சீன அதிபர் வந்தபோது போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான வழக்கு ரத்து!

சீன அதிபர் ஜீ ஜின்பிங் சென்னை வந்தபோது எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதாக திபெத்தை சேர்ந்த 9 மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின் பிங் ஆகியோர் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசினர். அப்போது, சென்னையில் படித்து கொண்டிருந்த திபெத்திய கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர் உள்ளிட்டோர் சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டத்திற்கு புறம்பாக கூடி போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சாலையில் சென்ற பேருந்துகளை நிறுத்தி சேதப்படுத்தியது மற்றும் பணியில் இருந்த காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், நீலாங்கரை மற்றும் சேலையூர் காவல் நிலையங்களில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி டென்சிங் லுப்சங் உள்ளிட்ட ஒன்பது பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு நடைபெற்றது. அப்போது மாணவர்கள் தரப்பில், தாங்கள் எந்த தவறும் செய்யாதவர்கள் எனவும், அந்த சமயத்தில் கல்லூரி மற்றும் விடுதி மூடிவிட்டதால் வீட்டிலிருந்த தங்களை போலீஸார் வலுக்கட்டயமாக கைது செய்து சிறையில் அடைத்ததாக வாதிட்டனர். தடையை மீறி எந்த போராட்டமும் நடத்தவில்லை என்றும், போலீசார் பொய்வழக்கு பதிவு செய்ததாகவும் குறிப்பிட்டனர். காலவதியான சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டதாகவும் அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி மஞ்சுளா, திபெத் மாணவர்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.