எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் கவர்னர் தலையீடு அதிகரிப்பு: ராகுல்

நம் நாட்டில் எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், கவர்னர்களின் தலையீடு அதிகரித்துள்ளது என, ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

கேரள மாநிலத்தில் நடைபயணம் நிறைவு செய்து, நேற்று, நீலகிரி மாவட்டம் கூடலுார் வந்த எம்.பி., ராகுலை, காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி வரவேற்றார். கட்சி நிர்வாகிகள், தேயிலை விவசாய தொழிலாளர்கள், தன்னார்வலர்களை சந்தித்து பேசினார். மாலை, 5:00 மணிக்கு கோழிப்பாலம் பகுதியில் இருந்து, 6 கி.மீ., பயணித்த ராகுல், கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே நிறைவு செய்தார். அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:-

நம் நாட்டில், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், கவர்னர்களின் தலையீடு அதிகரித்துள்ளது. சில மாநிலங்களில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை கலைக்கும் பணியில் பா.ஜ.,- ஆர்.எஸ்.எஸ்., ஈடுபட்டுள்ளன. மத்திய அரசு, ஒரே மொழி; ஒரே பண்பாட்டை திணிக்கிறது. மத்திய அரசின் வெறுப்பு தன்மையால் எந்த நன்மையும் மக்களுக்கு கிடைக்கவில்லை. நாட்டில் சிறு தொழில்கள் அதிகளவில் இருந்தால் மட்டுமே மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தற்போது இந்தியா வேலையில்லாத திண்டாட்டத்தை சந்தித்து வருகிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு விலைவாசி உயர்ந்து இருக்கிறது. நாட்டில் உள்ள ஏற்றத்தாழ்வு மனப்பான்மையை களைய நடைபயணம் மேற்கொண்டுள்ளேன். இவ்வாறு, ராகுல் பேசினார்.

ராகுல் காந்தி இன்று(வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு கூடலூரில் இருந்து புறப்பட்டு முதுமலை வழியாக கர்நாடக மாநிலத்துக்கு சென்று பாதயாத்திரையை தொடர்கிறார். அங்கு அவரது பாதயாத்திரை 21 நாட்கள் நடக்கிறது.