ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு!

ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாதிகள் மற்றும் உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் குழுக்களில் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வடகிழக்கு மாநிலங்களான நாகலாந்து, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சில இடங்களில் மத்திய அரசின் ஆயுதப்படை சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள திராப், சாங்லாங் மற்றும் லாங்டிங் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் மத்திய அரசின் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நேற்று முதல் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

மேலும், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள நம்சாய் மற்றும் மகாதேவ்பூர் காவல் நிலையங்களின் எல்லைக்குள் வரும் பகுதிகளிலும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்தச் சட்டம் அமலில் உள்ள இடங்களில் மத்திய பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கப்படும். சந்தேகப்படும் நபர்களை கைது செய்து, விசாரணை நடத்தும் அதிகாரம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.