சிவகங்கையில் நாம் தமிழர் கட்சிப் பிரமுகர் வீட்டில் என்ஐஏ சோதனை!

சிவகங்கையில் நாம் தமிழர் கட்சிப் பிரமுகர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி பிரமுகர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை கல்லூரி சாலையில் மன்னர் துரைசிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி விக்னேஷ்வரன் வீடு அமைந்துள்ளது. இவரது வீட்டில் இன்று காலை 6 மணியளவில் தேசிய புலனாய் அமைப்பு அதிகாரிகள் மூன்று பேர் திடீர் சோதனை மேற்கொண்டனர். ஓட்டுநராக பணிபுரியும் விக்னேஷ்வரன் விடுதலை புலி இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து வீட்டில் இருந்த விக்னேஷ்வரனிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் மற்றும் புத்தகங்கள் கையேடுகளை பறிமுதல் செய்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த என்ஐஏ அதிகாரிகளின் சோதனை 8 மணிக்கு நிறைவு பெற்றது. இந்த சோதனையின் முடிவில் சில முக்கிய ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியது, சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.