உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு விசாரணை 12 வாரங்களுக்கு ஒத்திவைப்பு!

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை 12 வாரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வை கட்டாயமாக்கி கடந்த 2017, 2018ஆம் ஆண்டில் இந்திய மருத்துவக் கவுன்சிலின் சட்ட திருத்தத்துக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்கக் கோரி தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டது. அதில், நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு கொடுத்த அறிக்கையின் அடிப்பையில் தமிழ்நாட்டில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோருவதற்காக, ‘மருத்துவப் படிப்புகளுக்கான தமிழ்நாடு மாணவர் சேர்க்கை 2021’ என்ற மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த மசோதா குடியரசு தலைவரின் முன்பு பரிசீலனையில் உள்ளதால், இந்த வழக்கை 12 வாரங்கள் ஒத்திவைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த கோரிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை 12 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.