உக்ரைனை முழுமையாக அழிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை: அதிபர் புதின்

இந்தியாவும், சீனாவும் எங்கள் நெருங்கிய கூட்டாளிகள், அவர்கள் உக்ரைன் பிரச்சினையை அமைதியான முரையில் தீர்க்க வேண்டும் என தொடர்ந்து கூறுகின்றனர். உக்ரைனை முழுமையாக அழிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை என்று ரஷ்யா அதிபர் புதின் கூறினார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. போர் 234-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போரில் கைப்பற்றிய உக்ரைனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா, கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷ்யா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. இந்த இணைப்பை தொடர்ந்து உக்ரைன் – ரஷ்யா இடையேயான மோதல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனிடையே, போரில் தற்போது உக்ரைன் படைகளின் ஆதிக்கம் சற்று அதிகரித்து வருகிறது. ரஷ்ய படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் மீட்டு வருகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் அதிகரித்து உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கஜகஸ்தான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ரஷ்யா – மத்திய ஆசிய நாடுகள் இடையே நடைபெறும் மாநாட்டில் புதின் பங்கேற்கிறார். இம்மாநாட்டில் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் அதிபர்களும் பங்கேற்கிறார். முன்னதாக ரஷ்ய அதிபர் புதின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ரஷ்யா – உக்ரைன் இடையேயான உறவில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து கூட்டாளிகள் கவலைபடுகின்றனர். இதில், எதிர்பாராதது எதுவும் இல்லை என்பது உண்மை. எங்களின் கண்ணோட்டம் குறித்து எங்கள் கூட்டாளிகளுக்கு நான் உரிய தகவல் கொடுத்து வருகிறேன். ஆனால், அது ரஷ்யா அதன் கூட்டாளி நாடுகளுடன் கொண்டுள்ள மதிப்பு, நட்பின் ஆழத்தை பாதிக்காது. அனைத்து பிரச்சினைகளையும் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவேண்டுமென இந்தியா, சீனா கூறி வருகின்றன. இந்தியாவும், சீனாவும் எங்கள் நெருங்கிய நட்பு நாடுகள், கூட்டாளிகள். அவர்களின் நிலைப்பாட்டை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், உக்ரைனின் நிலைப்பாட்டையும் நாங்கள் அறிவோம். அவர்கள் பேச்சுவார்த்தை வேண்டும் என கூறுகின்றனர். ஆனால், பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்பதை அதிகாரப்பூர்வ முடிவாக எடுத்துள்ளனர்.

உக்ரைன் மீதான போருக்காக நான் வருத்தப்படவில்லை. ரஷ்யா சரியான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. உக்ரைனை முழுமையாக அழிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தும் திட்டம் தற்போதைக்கு எங்களிடம் இல்லை.

ரஷ்ய ராணுவத்துடன் நேட்டோ படைகளை போரிட நேரடியாக களமிறக்குவது மிகவும் ஆபத்தான நடவடிக்கை. இது உலகளாவிய பேரழிவுக்கு வழிவகுக்கும். இது குறித்து பேசுபவர்கள் ரஷ்ய படையுடன் நேட்டோவை நேரடியாக களமிறக்கும் முடிவை எடுக்கமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.