தமிழகத்தில் இந்தி திணிக்கப்பட்டால் டெல்லியில் போராட்டம் நடத்தப்படும்: உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் இந்தி திணிக்கப்பட்டால் டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என்று, தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்தி திணிப்பையும் ஒரே நுழைவுத் தேர்வையும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் பாரதிய ஜனதாவை கண்டித்தும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள 6 மாவட்ட தி.மு.க. இளைஞர் அணியினர் மற்றும் மாணவர் அணியினர் குவிந்தனர். மத்திய அரசை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். மாணவர் அணி செயலாளர் டாக்டர் எழிலரசன் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார். மத்திய அரசுக்கு எதிராகவும், இந்தி திணிப்பு நடவடிக்கையை எதிர்த்தும் முழக்கங்களை எழுப்பினார்.

ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் எப்போதும் இந்தி திணிப்புக்கு எதிராக போராடுவோம். மீண்டும் ஒரு மொழிப்போர் சூழலை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டாம். தொடர்ந்து இந்தி திணிப்பை மேற்கொண்டால் டெல்லியில் போராட்டம் நடத்துவோம். முதல் கட்ட போராட்டம் இன்று நடந்துள்ளது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். 2019-ம் ஆண்டு நிலை தான் தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு ஏற்படும்.

மோடி, அமித்ஷா நினைப்பது போல இங்கு நடப்பது அ.தி.மு.க. ஆட்சி அல்ல. இப்போது தமிழகத்தை ஆட்சி செய்பவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இந்த ஆர்ப்பாட்டம் போராட்டமாக மாறுமா? என்பது மத்திய அரசின் கையில்தான் உள்ளது. இந்தி திணிப்பை எதிர்த்து ஆட்சியில் அமர்ந்த கட்சி தி.மு.க. நாங்கள் சொல்லும் ஒரு வார்த்தை இந்தி தெரியாது போடா. 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒரு துவக்கமாக இருக்கும். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடக்கவில்லை என மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம். எப்போதும் நுழைய விட மாட்டோம். பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் உதயநிதி ஸ்டாலின் காரில் புறப்படும்போது அவரிடம் நிருபர்கள், “டெல்லியில் போராட்டம் எப்போது நடத்தப்படும்” என்று கேட்டனர். அதற்கு அவர், “தி.மு.க. தலைவர்தான் முடிவு செய்து அறிவிப்பார்” என்று பதிலளித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் தயாநிதி மாறன் பேசியதாவது:-

உண்மையில் மோடி, அமித்ஷாவுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் நமது தமிழ் உணர்வுகளை வெளிக்கொண்டு வருகிறீர்கள். நாடாளுமன்ற தேர்தல் வரும் போதெல்லாம் பாஜகவின் முதல் ஆயுதம் மதம், 2வது ஆயுதம் இந்தி திணிப்பு. 2024 தேர்தலுக்கு இப்போது பாஜக தயாராகி வருகிறது. இதற்கான ஆயுதம் தான் தற்போதைய இந்தி திணிப்பு.

ஒரு மனிதருக்கு மிக முக்கிய பாசம், பந்தம் உண்டென்றால் அது தாய். தாய் வயிற்றில் இருந்து பிறந்த மனிதன் தாய் மீது பாசம் கொண்டிருப்பான். அதனால் தான் நாம் பேசும் மொழியை தாய் மொழி என்கிறோம். மோடி, அமித்ஷா அவர்களே உங்களின் தாய்மொழி இந்தி-யா?. குஜராத்தி தானே. அந்த மொழி மீது பாசம் இல்லையா?. ஆனால் ஆள்வதற்கு தேவை இந்தி என்பதால் இந்தியை திணிக்கிறீர்கள். இந்தி பேசும் மக்கள் அடிமைத்தனமாக உங்களுக்கு வாக்களிக்கிறார்கள் எனும் ஒரே காரணத்துக்காக இந்தியை நீங்கள் திணிக்கிறீர்கள்.

நாளை மத்திய பிரதேசத்துக்கு அமித்ஷா செல்ல உள்ளாராம். அங்கு மருத்துவம் முதலாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கு இந்தியில் அச்சிடப்பட்ட புத்தகங்களை கட்டாயமாக கொடுத்து இந்தியை புகுத்த போகிறாராம். இதில் கொடுமை, வெட்கம் என்ன தெரியுமா. இவர்கள் மருத்துவம் படித்து முடித்து கல்வி சான்றிதழ் வழங்கும்போது இந்தியில் படித்ததாக சான்றிதழ் பெறமாட்டார்களாம். அதனை மறைத்து விடுவார்களாம். ஏனென்றால் அது அவமானமாம். இந்த செயல் தேவையா.

கடந்த 77 ஆண்டுகளாக இந்தியா முன்னேறவில்லையா?. ஏன் இந்தியாவில் தலைசிறந்த மாநிலங்கள் எது என்றால் இந்தி பேசாத மாநிலங்கள் தானே. இந்தியை நாங்கள் ஐஐடி, ஐஐஎம்-மில் கொண்டு வரப்போகிறோம் என்கிறோம். முடிந்தால் ஐஐடியில் கொண்டு வாருங்கள் பார்க்கலாம். ஏனென்றால் ‛அவா’ விடமாட்டார். ஐஐடியில் இந்தி என பேச்சுக்கு சொல்லிவிட்டு தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க பார்க்கிறார்கள்.

பாருங்கள் எங்களின் இளைஞரணி செயலாளர் வந்துவிட்டார். அடுத்த ரத்தம் தயாராகி விட்டது. இந்திக்கு எதிராக அண்ணா ஏந்திய கொடி, கலைஞர் ஏந்திய கொடி, தளபதி ஸ்டாலின் ஏந்திய கொடியை தற்போது உதயநிதி ஏந்தி விட்டார். மோடி, அமித்ஷாவே உங்கள் பருப்பு இங்கு வேகாது. இவ்வாறு அவர் பேசினார்.