இந்தி திணிப்புக்கு எதிராக நவ.1ல் பேரணி: சீமான் அறிவிப்பு!

மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக வரும் நவ.1ம் தேதி பேரணி நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்தியப் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப அல்லது தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இதற்கு தமிழகத்தின் திமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சட்டசபையில் இந்தி எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பாக நவம்பர் 1ம் தேதி இந்தி திணிப்புக்கு எதிராக பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் 11வது அறிக்கையில் இந்தியா முழுவதும் இந்தியைத் திணிக்கும் செயல்திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இந்தியை கட்டாயப் பயிற்று மொழியாக்கவும், மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியை கட்டாயமாக்கி, தேர்வுகளை இந்தியில் நடத்த முற்படுவதன் மூலம் இந்நாட்டில் வாழும் மற்ற மொழிவழி தேசிய இனங்களின் தாய்மொழியைத் திட்டமிட்டு அழிக்கும் கொடுஞ்செயல் அரங்கேறி வருகிறது.

400 ஆண்டுகளைக் கூடத் தொடாத இந்தி மொழி, 50,000 ஆண்டுகளுக்கு மூத்த எங்கள் உயிருக்கும் மேலான தமிழ்மொழியை அழிப்பதா? இந்திய மொழிகளின் தொன்மையைத் தமிழிலிருந்து அறியலாம் என்றும், உலகின் மூத்த மொழியான தமிழ் இந்தியாவில் இருப்பது எங்களுக்குப் பெருமை என்றும் பிரதமர் ஒரு பக்கம் கூறிக்கொண்டே, இன்னொரு பக்கம் அத்தகைய பெருமைவாய்ந்த மொழியை சிதைக்கும் வேலையில் இறங்குவதா? இது இந்திய நாடா? இந்தியின் நாடா?

உலக வரலாற்றில் எங்கும் நடந்திராத அளவுக்கு மொழிக்காக அளப்பரிய தியாகங்களையும், மகத்தான அர்ப்பணிப்புகளையும், உயிர் ஈகங்களையும் செய்த பெரும்பூமி தமிழகமாகும். பல மொழிவழி தேசிய இனங்கள் வாழும் இந்தியாவை ஆளும் பாஜக அரசு, தனது அதிகார வலிமையைக் கொண்டு நாடெங்கிலும் இந்தியைத் திணிக்க முற்பட்டால், இந்தியாவின் மற்ற எல்லா மாநிலங்களும் அதனை ஏற்றுக் கொண்டாலும்கூட, தமிழ் மண் ஒருபோதும் தலை வணங்காது. தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும்! அந்த மொழிப்போர்க்களத்தில் முதன்மை படையாக நாம் தமிழர் கட்சி இருக்கும்! அதன் தொடக்கமாக வருகின்ற ‘நவம்பர் 1 – தமிழ்நாடு நாள்’ அன்று இந்தி திணிப்புக்கு எதிரான மாபெரும் கண்டனப் பேரணியை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கவிருக்கிறது. அன்னை தமிழ் காக்க நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் இம்மாபெரும் இந்தி திணிப்பு எதிர்ப்பு பேரணியை மத்திய அரசுக்கு எதிரான முதன்மைப் போர் அணியாக மாற்ற அனைவரும் உணர்வெழுச்சியுடன் பெருந்திரளாகக் கூடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.