மாநில அரசுகள் சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்ப மத்திய அரசு தடை!

மாநில அரசுகள் சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பவும், சேவை விநியோகம் செய்யவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பவும், சேவை விநியோகம் செய்யவும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடை விதித்துள்ளது. மேலும், ஏற்கனவே ஒளிபரப்பில் உள்ள சேனல்கள் மத்திய ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் மாநில அரசுகள் சார்பில் ஒளிபரப்பாகும் சேனல்களில் பயணிக்கும் விநியோகம் சார்ந்த நிறுவனங்கள் டிசம்பர் 31, 2023க்குள் அதனை நிறுத்திக்கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையின் கீழ், வங்காள கிரிக்கெட் சங்கம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் சட்ட அமைச்சகத்தின் கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவின்படி மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசாங்கங்கள் கல்வி நோக்கங்களுக்காக ஒளிபரப்பும் சேனல்களை புரிந்துணர்வு ஒப்பந்த மூலம் பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டின் கீழ் அனுமதிக்கப்படவுள்ளது. மாநில அரசுகள் நடத்தி வரும் சேனல்களின் அனைத்து கொள்கைகளும் பிரசார் பாரதியின் வரம்பிற்குள் கொண்டு வரப்படவேண்டும் என்றும் அதுவரை, செயல்பட்டு கொண்டிருக்கும் கல்வி தொலைக்காட்சிகள் மற்றும் பிற நிகழ்ச்சிகள் தடையின்றி ஒளிபரப்ப அனுமதிக்கப்படும் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பால் தமிழ்நாட்டின் கல்வி டிவி மற்றும் அரசு கேபிள் ஆகியவை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது.