நோவா ககோவ்கா அணையை தகர்க்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் குற்றச்சாட்டு!

உக்ரைனின் நோவா ககோவ்கா அணையை தகர்க்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் வொலோடிமர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்

உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதில் இருந்தே, இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து நேட்டோ படையில் இணையவும் உக்ரைன் விருப்பம் காட்டி வருகிறது. ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தை உக்ரைன் மீற முயற்சிப்பதால், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தனது படைகளை உக்ரைன் எல்லையில் குவித்து வந்த நிலையில், அந்நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் கடந்த 8 மாதங்களாக நீடித்து வருவதற்கிடையே, உக்ரைனின் லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றியது. இந்த நகரங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் திட்டத்துக்கு எதிரான தீர்மானம் ஐ.நா.சபையில் நிறைவேறியுள்ளாது. மேலும், ரஷ்யாவுக்கு ஐ.நா., பொதுச்சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், உக்ரைனின் நோவா ககோவ்கா அணையை தகர்க்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் வொலோடிமர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். 1956 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அணை 30 மீட்டர் உயரமும் 3.2 கி.மீ. நீளமும் கொண்டது. 18மீ கன-அடி மீட்டர் தண்ணீரை சேமிக்கும் திறன் கொண்டது. டினிப்ரோ ஆற்றின் மீது ககோவ்கா நீர்மின் நிலையத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்ட இந்த அணை கிரிமியா தீபகற்பத்திற்கும் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்திற்கும் தண்ணீரை வழங்கி வருகிறது.

ரஷ்ய படைகள் வெடிமருந்துகளை பயன்படுத்தி இந்த அணையை தகர்க்க திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள வொலோடிமர் ஜெலன்ஸ்கி, இதனால் கெர்சன் பிராந்தியத்தின் பெரும்பகுதி பேரழிவை சந்திக்கும் எனவும், கிரிமியா மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் அச்சம் தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்யாவின் இந்த திட்டத்தை தடுக்குமாறு உலக நாடுகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த அணையை ஏவுகணை தாக்குதல் நடத்தி உக்ரைன் படைகள் அழிக்க நினைப்பதாக ஏற்கனவே ரஷ்யா குற்றம் சாட்டிய நிலையில், ரஷ்யா மீது தற்போது உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. முன்னதாக, கிரிமிய தீபகற்பத்தை ரஷ்யாவுடன் இணைக்கும் முக்கிய பாலத்தின் மீது வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற லாரியை வெடிக்க வைத்து உக்ரைன் தகர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.