கால்பந்து வீராங்கனை பிரியா குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி

பிரியா குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

மருத்துவர்களின் தவறான சிகிச்சை, அலட்சியம் காரணமாக கால்பந்து வீராங்கனை பிரியா (17) உயிரிழந்தது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

சென்னை கொளத்தூர் அரசு மருத்துவமனையில் மூட்டு சவ்வு கிழிந்ததற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட கால்பந்து வீராங்கனையும், கல்லூரி மாணவியுமான பிரியா அடுத்தடுத்து ஏற்பட்ட உடல் நல பாதிப்பால் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. விளையாட்டு வீரர்கள்/ வீராங்கனைகள் நாட்டின் சொத்துகள். அவர்கள் போற்றி பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்கப்பட வேண்டும். மருத்துவர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்

கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.10 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல. அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.