இலங்கை கடற்படையின் அத்துமீறல் இனியும் நீடிக்கக்கூடாது: ஜி.கே.வாசன்

இலங்கை கடற்படையின் அத்துமீறல் இனியும் நீடிக்கக் கூடாது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகை சுற்றி வளைத்து படகையும், அதிலிருந்த 14 மீனவர்களையும் சிறைப்பிடித்துச் சென்றனர். மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல், சிறைப்பிடித்தல், படகுகளை பறிமுதல் செய்தல் இன்னும் நீடிக்கிறது. இது இலங்கை கடற்படையினரின் அத்துமீறல். இந்நிலை இனியும் நீடிக்கக் கூடாது என்பது தான் த.மா.கா வின் எதிர்பார்ப்பாகும். மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 14 மீனவர்களையும், விசைப்படகையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் உயிரிழந்த த.மா.க., நிர்வாகியின் குடும்பத்தினருக்கு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தார். அதனைதொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. எனவே பாதிக்கப்பட்ட பயிர்களை முறையாக கணக்கீடு செய்து அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தற்போது 19-ந்தேதி முதல் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில் தற்போது வந்துள்ள அறிவிப்பு அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கி உள்ள நிலையை முதற்கட்டமாக அகற்றவேண்டும். மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நெற்பயிர் மட்டுமின்றி வாழை, தென்னை, மானாவாரி பயிர்களும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே அரசு இதில் உரிய கவனம் செலுத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும். தற்போது குறிப்பிட்ட சில தாலுகாக்களுக்கு மட்டும் ரேசன்கார்டுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர்த்து மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்தினருக்கும் நிவாரணம் வழங்கவேண்டும். சோகத்தில் உள்ள விவசாயிகளுக்கு அரசு ஆறுதலான நிவாரணம் வழங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.