ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை: மத்திய அரசு மறு சீராய்வு மனு!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, மத்திய அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூருக்குத் தேர்தல் பிரசாரத்துக்காக வந்த போது, அவர்மீது நடத்தப்பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதலில் அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரும் முக்கியக் குற்றவாளிகளாகக் கைதுசெய்யப்பட்டு, கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த மே மாதம் 18ம் தேதி, உச்ச நீதிமன்றம் தனது தனிப்பட்ட அதிகாரமான சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது. பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து, இந்த வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மற்ற 6 பேரும் விடுதலை செய்ய வேண்டும் வலியுறுத்தப்பட்டது. அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் நளினி மற்றும் ரவிச்சந்திரன் இருவரும் தனித்தனியே உச்ச நீதிமன்றத்தில் தங்களை விடுதலை செய்யக் கோரி மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பில், பேரறிவாளனின் நன்னடத்தை குறித்து, பரோலில் வெளிவந்தபோதும், சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொண்டதாக மேற்கோள் காட்டியுள்ளது. தாங்களும் அதேநிலையில் உள்ளதால், தங்களையும் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும். மேலும், இந்த வழக்கில் தங்களை விடுதலை செய்யும் வரை தங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர் கவாய் தலைமையிலான அமர்வு முன் கட்நத 11ம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சிறையில் இருந்துவரும், 6 பேரின் நன்னடத்தை குறித்து தமிழக அரசும், மனுதாரர்கள் தரப்பிலும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

காங்கிரஸ் கட்சியை தவிர்த்து மற்ற தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சிகள், எழுவர் விடுதலையை வரவேற்றனர். இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த 6 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, மத்திய அரசு சார்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.