உ.பி., மாநிலம் போலீஸ் ஸ்டேஷனில் 581 கிலோ கஞ்சாவை தின்ற பெருச்சாளி!

உ.பி., மாநிலம் மதுரா போலீஸ் ஸ்டேஷனில் பறிமுதல் செய்யப்பட்ட 581 கிலோ கஞ்சாவை பெருச்சாளி தின்றுவிட்டதாக நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் மதுரா போலீஸ் ஸ்டேஷனில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் 700 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக 2018, 2019ல் மட்டும் மதுரா போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட நெடுஞ்சாலையில் நடத்திய மெகா கஞ்சா வேட்டையில் 581 கிலோ கஞ்சாக்கள் கடத்தல்காரர்களிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கடத்தல்காரர்கள் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில், குற்றத்தை நிரூபணம் செய்து தண்டனையை அறிவிக்க பறிமுதல் செய்த கஞ்சாவை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் போலீசுக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து போலீஸ் தரப்பில் கஞ்சாவின் மாதிரிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. ஆனால், நீதிமன்றம் இதை ஏற்க முடியாது; பறிமுதல் செய்யப்பட்ட 581 கிலோ கஞ்சாவையும் நீதிமன்றத்தில் காட்ட வேண்டும் என்று உத்தரவிட்டது. அப்போது மதுரா போலீசார் நீதிமன்றத்தில் அளித்த பதில் தான் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதாவது, மதுரா போலீஸ் ஸ்டேஷன் ஸ்டோர் ரூம்மில் எலித்தொல்லை அதிகமாக இருப்பதாகவும், அந்த எலிக்கள் கிலோக்கணக்கில் இருந்த கஞ்சா அனைத்தையும் தின்றுவிட்டதாகவும், எனவே 581 கிலோ கஞ்சாவை ஆதாரமாக சமர்ப்பிக்க முடியவில்லை எனவும் பதில் அளித்துள்ளனர். விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாக்களை வேறொருவரிடத்தில் விற்றுவிட்டு எலிகள் மேல் பழிசுமத்தியது அம்பலமாகியுள்ளது.