தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அறிவிப்பை வரவேற்கிறேன்: ஆ.ராசா!

திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அறிவிப்பை வரவேற்பதாக அக்கட்சியின் எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

கோவையில் கொடிசியா அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினரும் திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா செய்தியாளர்களை சந்தி்த்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவை மாவட்டம் , அன்னூர் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் டிட்கோ தொழிற்பூங்கா அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டபோது விவசாயிகள் போராட்டத்தை அறிவித்து மக்களிடத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகள் கூறி போராட்டம் நடத்தினர். பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நானும், கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் தொழிற்துறை அமைச்சர் இதுகுறித்து முதல்வரிடம் பேசியுள்ளோம். டிட்கோ பகுதியில் வர உள்ள நிறுவனங்கள் மாசு உருவாக்கும் நிறுவனங்கள் அல்ல. மத்திய அரசு மாசு உருவாக்கும் நிறுவனங்களை அனுமதிக்காது.

அங்கு கையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள் விளை நிலங்களாக இல்லை. அதனால் கையகப்படுத்த எந்த தடையும் இல்லை. அச்சத்தின் காரணமாக மக்கள் போரட்ட நிலைப்பாடு எடுத்துள்ளனர். இன்றோ அல்லது நாளையோ இதுதொடர்பாக விரிவான அரசு அறிவிப்பு வெளியாகும். கம்பெனி நிலங்கள் மட்டுமல்ல; மக்களின் நிலங்களும் எடுக்கப்படும் என வதந்திகள் பரப்புகின்றனர். ஆனால் கம்பெனி நிலங்கள் மட்டும் கையகப்படுத்தப்பட உள்ளது. மக்கள் தாங்களே கொடுத்தால் மட்டும் நிலம் எடுக்கப்படும். விளை நிலங்கள் ஒருபோதும் எடுக்கப்படாது. அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த பரப்படும் தகவல்கள் தவறானது. நிலத்தடி நீரை கெடுக்கும் தொழிற்சாலைகள் அங்கு வராது. அனுமதி இல்லாமல் தனிநபர் சாகுபடி நிலத்தை எடுக்க மாட்டோம். காற்று, நிலம் மாசுபடுத்தும் தொழிற்சாலை அங்கு வராது. அன்னூரில் டிட்கோ அமைக்கப்படுவதால் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பெருகும். பொய் பிரச்சாரத்தை ஊடகங்கள் மூலம் முறியடிக்க வேண்டும்.

50 கோடி ரூபாய்க்கு மேல் எந்த நிறுவனங்கள் என்றாலும் மத்திய அரசு மூலம் தான் அனுமதியளித்து வர வேண்டும். அண்ணாமலை அரசியல் எனக்கு புரியவில்லை. நாங்குநேரியை தொழில் முனைவோர் விரும்பவில்லை; அதற்கு என்ன செய்ய முடியும்? மக்களின் எதிர்ப்புகள் நியாயமாக இருக்கும் பட்சத்தில் மக்கள் பக்கம் தான் இருப்போம்.

திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்ற அண்ணாமலை அறிவிப்பை வரவேற்கிறேன்; ஆனால் அதை நிரூபிக்க வேண்டும். மக்களின் தேவை என்ன என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் கேட்டு தீர்த்து வைப்பேன். பாதிப்பு என்றால் மக்கள் பக்கம் நிற்பேன். ஏற்கெனவே அன்னூர் டிட்கோ விவகாரம் தொடர்பாக அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் என்னை சந்தித்துள்ளனர். அவர்களது பிரச்னைகள் தொடர்பாக கேட்டறிந்துள்ளேன். என்னை சந்தித்தவரை எவ்வித பிரச்னையையும் அவர்கள் கூறவில்லை. என்னிடம் அவர்கள் தெரிவித்த கருத்துகளை முதல்வரிடம் தெரிவித்துள்ளேன். இவ்வாறு ஆ.ராசா கூறினார்.