ஈஷா யோகா அறக்கட்டளைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீசு ரத்து: உயர் நீதிமன்றம்

விதிகளை மீறி கட்டடம் கட்டியதாக ஈஷா யோகா அறக்கட்டளைக்கு எதிராக தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக் கூடாது என விளக்கம் கேட்டு கோவை ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி. கிருஷ்ணகுமார் அமர்வில் கடந்த 1 ஆம் தேதி இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், “ஈஷா அறக்கட்டளை கல்வி நிறுவனமா, இல்லையா என்பதே தற்போது வரை சர்ச்சைக்குரிய கேள்வியாக உள்ளது. 4 லட்சம் சதுர மீட்டர் உள்ள ஈஷா அமைப்பில் 10 ஆயிரம் சதுர மீட்டர் மட்டுமே கல்வி நிறுவனமாக கருதலாம்; மற்ற பரப்பளவை கல்வி நிறுவனமாக கருத முடியாது என வாதிட்டார். மேலும் கல்வி நிறுவனங்கள் சுற்றுச்சூழல் விலக்கு அளிப்பது தொடர்பான மத்திய அரசு 2014 ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது. எனவே இடைக்கால தடையை நீக்க வேண்டும்; நோட்டீஸ் மீது நடவடிக்கைகள் எடுக்க அனுமதிக்க வேண்டும்” என வாதிட்டார்.

ஈஷா அறக்கட்டளை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “உடல், மனம், நன்னெறி மேம்படுத்தும் நிறுவனங்களை கல்வி நிறுவனங்கலாக கருத வேண்டும். இதனை செய்யும் கல்வி நிறுவனமாக ஈஷா அமைப்பு உள்ளது. எனவே சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை. எனவே அரசின் நோட்டீஸ்க்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கல்வி போதிக்கும் நிறுவனங்கள் சுற்றுச்சூழல் அனுமதி விலக்கு பெற முடியும். அதன்படி ஈஷா விலக்கு பெற முடியும்” என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், “ஈஷா யோகா மையத்தை கல்வி நிறுவனமாகவே கருத முடியும். எனவே சுற்றுச்சூழல் விலக்கு பெற உரிமை உள்ளது. மொத்தமுள்ள 4 லட்சம் ச.மீ. பரப்பளவு நிலத்தில் 1,25,000 ச.மீ. பரப்புக்கு மேற்கொள்ளப்பட்ட கட்டுமானத்திற்கு கல்வி நிலையங்களும் அமைந்துள்ளதால் விலக்கு பெற உரிமை உள்ளது. எனவே அனுமதி தொடர்பாக ஈஷாவுக்கு எதிராக மசுக்கட்டுப்பாட்டு அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது” என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.