வரும் காலத்தில் ஒரே வீட்டில் இருந்து இரண்டு முதல்வர் கூட அறிவிக்கப்படலாம்: டிடிவி தினகரன்

ஒரே வீட்டில் இருந்து இரண்டு முதலமைச்சர்கள் கூட வரும் காலத்தில் வரும் காலத்தில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்

திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டம், தொழில் முன்னேறிய பகுதியாக இருந்து வந்தது. தற்போது பல்வேறு பிரச்சனைகளால் சிக்கி தவிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் சரியான முறையில் அணுகி மீண்டும் திருப்பூரை ஒரு சிறந்த தொழில் நகரமாக உருவாவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

உதயநிதி ஸ்டாலின் திமுகவினுடைய சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அமைச்சராவதில் சட்டப்படி எந்த தவறும் இல்லை. அவருடைய தந்தை ஸ்டாலின் 1989ஆம் ஆண்டு முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார். கருணாநிதி முதலமைச்சராக இருந்த பொழுது அவர் ஒன்றும் அவசரக் கதியில் ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. அனுபவம் வாய்ந்தவர்கள் முன் வரட்டும் என சொல்லி, அனுபவம் வாய்ந்தவர்கள்தான் அமைச்சராக இருந்தார்கள். புதியவர்களும் வருவது உண்டு. கருணாநிதி முதல்வராக இருந்த பொழுது 1996இல்தான் ஸ்டாலினை மேயராக கொண்டு வந்தார். அதன்பின்பு 2006 இல் தான் உள்ளாட்சி துறை அமைச்சராக அறிவித்தார். பொறுமையாகதான் கையாண்டார்.

ஆனால், அவருடைய மகன் முத்துவேல் கருணாநிதியின் மகன் என சொல்லிக் கொண்டிருக்கிற ஸ்டாலின், அவசரக் கதியில் அவசர அவசரமாக அமைச்சராக உதயநிதி ஸ்டாலினை அறிவித்தது ஏனோ என எல்லோர் மனதிலும் அய்யம் ஏற்படுகிறது. அதற்கு காரணம் இயற்கையாகவே தெரிந்துவிடும். அவசரக் கதியில் அமைச்சராக வேண்டிய அவசியம் இல்லை. அவர் அரசியலுக்கு வந்ததும் அவசரக் கதி தான். அவர்களின் வாரிசுகள் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என முன்னர் ஸ்டாலின் தெரிவித்தார். தற்போது சொல்வதற்கு மாறாக செயல்பட்டு வருகிறார். வரும் காலத்தில் ஒரே வீட்டில் இருந்து இரண்டு முதல்வர் கூட அறிவிக்கப்படலாம்.

ஆர்.எஸ்.பாரதி போன்றவர்கள், நாங்கள் எல்லாம் வாழையடி வாழையாக கட்சிக்காக பல தலைமுறைகளை உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், புதிதாக வந்தவர்களுக்கெல்லாம் முக்கிய பதவிகள் எல்லாம் கிடைக்கிறது என கூறி, அவர்களின் மனக்குமுறலை வெளிப்படுத்தி விட்டார். அதேபோல் பல பேருக்கு அந்த குமுறல் உள்ளது. திடீரென வந்தவர்கள்கள் எல்லாம் அமைச்சர் ஆகிறார்கள். அதற்கு என்ன காரணம் திமுகவில் உள்ளவர்களுக்கு எல்லாம் திறமை இல்லையா? நிர்வாக திறமை இல்லையா? வேற ஏதாவது கரெக்டா கரெக்ட் பண்ணி கொடுக்கிறார்களா? கத்திரிக்கா முத்தினால் சந்தைக்கு வந்து தான் ஆக வேண்டும்.

2023 நவம்பர் டிசம்பரில் அமமுக தேர்தல் கூட்டணி முடிவு அறிவிக்கப்படும். ஜெயக்குமார், ராஜன் செல்லப்பா ஏன் பயப்படுகிறார்கள். தினகரன் தனி கட்சியாக ஆரம்பித்து சென்று விட்டார். அதுபோல் ஓ.பன்னீர்செல்வம் தனி கட்சி ஆரம்பிக்க வேண்டும் என பதறுகிறார்கள். தினகரன் மாதிரி ஏன் நீங்கள் ஒரு கட்சி ஆரம்பிக்க வேண்டியது தானே?. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றால் ஏற்கனவே பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை எல்லாம் இணைத்து வைத்தார்களே அவர்கள் இணைந்தால் தான் முடியும்.

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் ஒரு பிரிவாகவும், பழனிசாமி ஒரு பிரிவாகவும் இருக்கிறார்கள். அண்ணா திமுக என்பது தமிழ்நாடு முழுவதும் திருத்தணியில் இருந்து கன்னியாகுமரி வரையும், ஊட்டியில் இருந்து நாகப்பட்டினம் வரையும், 234 தொகுதிகளிலும் வலுவாக போட்டியிடுகிற கட்சியாக இருந்தது. பழனிசாமியும் அவரைச் சேர்ந்த ஒரு குழுவினர் அதை ஒரு வட்டார கட்சியாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். வருங்காலத்தில் சமுதாய கட்சியாக மாறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. புரட்சித் தலைவர் என்ன காரணத்துக்காக ஆரம்பித்தாரோ? அம்மா அவர்கள் அதை என்ன காரணத்திற்காக கட்டி காத்தார்களோ, அது எல்லாம் இன்றைக்கு மாற்றி மாற்று பாதை அமைப்போம் என்பது போல அந்த பாதையில் இருந்து விலகி, ஒரு கடல் போன்ற இயக்கத்தை குட்டை மாதிரி உருவாக்குகிறார்கள். அதிமுக ஒரு வட்டார கட்சியாக மாறிக்கொண்டிருக்கிறது. வருங்காலத்தில் நாலைந்து பேர் மட்டும் உட்கார்ந்து கொண்டு கட்சியை நடத்துவதைதான் அவர்கள் விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.