சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஆய்வு!

சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் செயல்பாடுகள் குறித்து இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, இத்துறையின் செயல்பாடுகள் குறித்து சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையானது, அரசினால், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரை, முதலமைச்சரால் விதி 110இன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் வெளியிடப்பட்ட இதர அறிவிப்புகள், நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை மற்றும் மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்தின்போது அமைச்சர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட துறைகளின் மூலமாக ஆணை வெளியிடப்பட்ட விவரங்கள் மற்றும் அவற்றின் செயலாக்கத்தினை இத்துறை கண்காணிக்கும் முறை பற்றியும், துறைவாரியாக 2021-22, 2022-23ஆம் ஆண்டுகளில் இதுவரை வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்கு ஆணை வெளியிடப்பட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விவரிக்கப்பட்டது.

மாவட்ட அளவில் அரசின் முக்கிய திட்டங்களின் செயல்பாட்டினை கண்காணிப்பதற்காக மாநில அளவில் உள்ள மூத்த இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களாகவும், கள அளவில் ஆய்வு செய்வதற்காக மாவட்ட அளவில் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்களை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கள ஆய்வு அலுவலர்களாகவும் அரசு நியமித்துள்ளது. இவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆய்வறிக்கைகளை இத்துறை உரிய முறையில் தொகுத்து சம்மந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து அதன் அடிப்படையில் திட்டங்களின் சிறப்பான செயல்பாட்டிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.

மேலும், இத்துறையினால் முன்னெடுக்கப்பட்ட சில முயற்சிகளான மாவட்டங்களின் வளர்ச்சிக்கான ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’, இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கான ‘நான் முதல்வன்’ திட்டம், இளம் வல்லுநர்களின் திறன்மிகு ஆற்றலை அரசுத்திட்டங்களில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட ‘தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம்’ ஆகியவற்றின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் அமைச்சருக்கு எடுத்துரைக்கப்பட்டது. அரசு நிர்வாகத்தில் தரவு சார்ந்த மேலாண்மையின் பயனாக அரசின் திட்டங்கள் தகுதியுள்ள பயானளிகளை சென்றடைவதை உறுதி செய்யும் நடைமுறைகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

ஆய்வின்போது, மக்களை தேடி மருத்துவம், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் புதுமைப் பெண் திட்டங்களின் முன்னேற்றத்தைக் குறித்தும் அத்திட்டங்களினால் மக்களுக்கு ஏற்பட்ட பயன்கள் குறித்தும், இத்திட்டங்களை கண்காணிக்கும் விதம் குறித்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரிவாக கேட்டறிந்தார். இவைத்தவிர, பல்வேறு துறைகளின் முத்திரை பதிக்கும் திட்டங்கள், தகவல்தொழில்நுட்ப முன்னெடுப்புகளின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு செய்தார்.