ஸ்டாலினை விமர்சிக்க அண்ணாமலைக்கு அருகதை இல்லை: நாராயணசாமி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பற்றி குறைகூற அருகதை இல்லை என்று புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சர்புதீன் மரைக்கார் இல்ல திருமண விழா, பதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் தலைமையில் நடைபெற்றது. திருமண விழாவுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி கூறுகையில், ‘தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் தமிழக அரசை கண்டித்து அரசியல் தெரியாத அண்ணாமலை போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தமிழகத்துக்கு உரிய நிதியை பெற்றுத்தர துப்பு இல்லாத பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தமிழக அரசை குறை கூற அருகதை இல்லை என்றும் நாராயணசாமி கடுமையாக விமர்சனம் செய்தார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருக்கின்ற தமிழிசை சௌந்தரராஜன் புதுவை முதல்வர் ரங்கசாமி உடன் இணக்கமாக இருப்பதாக கூறிக்கொண்டு முதலமைச்சருக்கு குழி பறித்துவிட்டார். இதனால் முதலமைச்சர் ரெங்கசாமி புலம்ப ஆரம்பித்து விட்டதாகவும் அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை; தலைமைச் செயலாளர் ஒத்துழைப்பு இல்லை; அதிகாரிகள் சொல்வதை கேட்பதில்லை. இதனால் புதுவையின் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. மத்தியில் உள்ள நரேந்திர மோடி ஆட்சியில் அனுப்பப்படும் கோப்புகளை கிடப்பில் போடுவதாக புலம்புகிறார் ரங்கசாமி.

ஒன்றரை ஆண்டுக்கு முன்பே பாஜகவுடன் கூட்டணி வைக்க கூடாது என கேட்டுக்கொண்ட நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக என் ஆர் காங்கிரஸை பாஜக விழுங்கி விட்டதாகவும். புதுச்சேரியில் தற்போது பொம்மை முதலமைச்சர் ரங்கசாமி என்றும், சூப்பர் முதலமைச்சர் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் என்றும் விமர்சனம் செய்தார் நாராயணசாமி.

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க முடியாது என்று நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு அறிவித்துள்ள நிலையில், பாஜக கூட்டணியை விட்டு என். ஆர் காங்கிரஸ் கட்சி விலகி போராட்டம் நடத்தினால் அதற்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என தெரிவித்த நாராயணசாமி, நாற்காலிக்கு ஆசைப்பட்டு தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதாகவும் இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை எனவும் காட்டமாக தெரிவித்துள்ளார்.