தமிழகத்தில் ஒமிக்ரான் போன்ற பாதிப்பு எதுவும் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சீனாவில் தற்போதுகூட கொரோனா அதிகரித்து வந்தாலும் தமிழகத்தில் ஒமிக்ரான் போன்ற பாதிப்பு எதுவும் இல்லை என மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

மருத்துவத்தில் தமிழ்நாடு முன்னோடியாக இருக்கிறது என ஒன்றிய அரசு விருது அளித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
முதல் தவணை தடுப்பூசி 96 சதவீதம் பேர், இரண்டாம் தவணை 92 சதவீதம் பேர் செலுத்தியதன் மூலம் 90 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. கொரோனா, ஒமிக்ரான் தொற்று குறைந்துள்ளதற்கு அரசு மருத்துவமனை மட்டுமின்றி தனியார் மருத்துவமனை பங்களிப்பும் இன்றியமையாதது.

தமிழக முதல்வராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதற்கு பின் ஒன்றிய அரசின் சார்பில் மருத்துவ துறைக்கு ஏராளமான விருதுகள் தொடர்ந்து கிடைக்கப்பெற்று வருகின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் 10க்கும் மேற்பட்ட விருதுகளை தமிழக அரசு பெற்றிருக்கிறது. மக்களை தேடி மருத்துவம் திட்டமும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதேபோல் இன்னுயிர் காப்போம், நம்மை காப்போம் 48 என்ற மகத்தான திட்டமும் இந்திய அளவில் பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றிருக்கிறது.