தமிழிசை என்ற பெயரை வைத்துக் கொண்டு தமிழை அழிக்கும் ஆளுநர்: நாராயணசாமி

தமிழிசை என்ற பெயரை வைத்துக்கொண்டு தமிழ் மொழியை அழிக்க நினைக்கிறார் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-

நாட்டின் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு விற்று வருகின்றார். சென்னை, பெங்களூர், திருச்சி உள்ளிட்ட 27 விமான நிலையங்களை தனியார் மயமாக்கப்பட்ட உள்ளது என்றும், மோடி அரசின் கஜானா காலியாவதால் பொது சொத்துக்களை விற்று ஆட்சி நடத்துவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

மேலும் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளை சி.பி.எஸ்.சி பாடதிட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்காக புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது? இது அரசின் கொள்கை முடிவா?. சி.பி.எஸ்.சி வந்தால் தமிழ் பாடம் இருக்காது. ஆனால் தமிழ் மொழியுடன் கூடிய சி.பி.எஸ்.சி பாடதிட்டத்தை அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தான் அறிவிக்க இயலுமா என்றும் கேள்வியெழுப்பிய நாராயணசாமி, தமிழிசை என பெயர் வைத்துக்கொண்டு தமிழை அழிக்கும் வேலையில் ஆளுநர் தமிழிசை செளந்தராஜன் இறங்கியுள்ளார் என குற்றஞ்சாட்டினார்.

தமிழிசை தனது அதிகாரத்தை கையில் எடுத்துள்ளதால் தான் முதலமைச்சர் ரங்கசாமி ஆதங்கப்படுகின்றார். முதல்வரை சுதந்திரமாக செயல்பட விடவில்லை என்றும், அதை தட்டிகேட்க ரங்கசாமிக்கு திரானி இல்லை என்றவர், தமிழிசை செளந்தரராஜன் புதுச்சேரி அரசுக்கு என்ன ஒத்துழைப்பு கொடுக்கின்றார் என்ற தகவலை பொது மக்கள் மத்தியில் சொல்ல வேண்டும். எத்தனை கோப்புகளுக்கு அவர் கையெழுத்திட்டார் என்பதை பகிரங்கமாக பட்டியலிட வேண்டும் எனவும் நாராயணசாமி வலியுறுத்தினார்.

என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையில், அதிகாரம் வேண்டும் என்று நாங்கள் மத்திய அரசிடம் கேட்கவில்லை. சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2019ல் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என வலியுறுத்தினேன் என விளக்கம் அளித்த நாராயணசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணனின் முகம் என்னெவென்று தோழுரித்து காட்டுவேன் என்றும், நான் யாருக்கும் பயப்பட மாட்டேன், விடுதலை புலிகளின் மிரட்டலையே எதிர்கொண்டவன், என் வீட்டில் வெடிகுண்டு வைத்தார்கள் அதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என நாராயணசாமி ஆவேசமடைந்தார்.

தொடர்ந்து பேசிய அவர் பாஜக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கொள்கையில் உறுதியாக இல்லை. கொள்கை முரண்பாடு உள்ள கட்சிகள் கூட்டணியில் நிலைக்க முடியாது என்றும், மாநில அந்தஸ்து விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி தெருவில் இறங்கி போராடினால் நாங்கள் கையெழுத்திட்டு இணைந்து போராட தயார் என்றவர், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழகத்திலும் திமுக தற்போது ஏற்றுக்கொள்ளவில்லை, இந்த ஆட்சியிலும் புதிய கல்விக்கொள்கையை கொண்டு வரவிடமாட்டோம் என நாராயணசாமி எச்சரிக்கை விடுத்தார்.