புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்: சங்கர் ஜிவால்

இந்த ஆண்டு சென்னை ஹோட்டல்களில் நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்ற வேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் கூறியதாவது:-

காவல்துறை சைபர் குற்றங்கள் தொடர்பான குற்றவாளிகள் 75 சதவீதம் பேர் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். நைஜீரியா போன்ற வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் இதுதொடர்பான குற்றங்களில் கைதாகி உள்ளனர். சைபர் குற்றங்கள் தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சைபர் குற்றங்களை விசாரிக்க சென்னையில் ஒரு போலீஸ் நிலையம்தான் இருந்தது. தற்போது 5 போலீஸ் நிலையங்கள் உள்ளன.

தமிழக அரசு குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது, அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் மீது வாகன சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பது தற்போது தினமும் நடந்து வருகிறது. புத்தாண்டு தினம் வரை இந்த நடவடிக்கை தொடரும். புத்தாண்டு போன்ற கொண்டாட்டங்களை ஜாலியாக கொண்டாடலாம். ஆனால் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் அந்த கொண்டாட்டங்கள் இருக்க வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக ஓட்டல்கள் மற்றும் ரிசார்ட்டு போன்றவைகளுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்படும். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நட்சத்திர ஓட்டல்கள் போன்றவற்றில் எந்த அளவுக்கு ஆட்களை அனுமதிக்க முடியுமோ, அந்த அளவுக்குதான் டிக்கெட்டுகள் வழங்க வேண்டும். அளவுக்கு அதிகமாக டிக்கெட்டுகள் வழங்கக்கூடாது. இதனால் தேவை இல்லாத பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. உரிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது, என்பது பற்றி உரிய விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும். புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக ஓட்டல் நிர்வாகத்தினருடன் வரும் 29ஆம் தேதி முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. அப்போது புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதிக்கப்படும் நேரம் குறித்தும் முடிவு எடுக்கப்படும் என்றும் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பரவியதால் உலகம் முழுவதும் கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மக்கள் அதிகம் கூடவும் புத்தாண்டு கொண்டாடவும் தடைவிதிக்கப்பட்டது. படிப்படியாக கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. மக்கள் எந்த வித கட்டுப்பாடுகளும் இன்றி வெளியே நடமாடினர். இந்த நிலையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இவ்வாறு சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.