கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்: விஜயகாந்த்

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும் என்று
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

சீனாவில் பரவி வரும் பிஎப்.7 கொரோனா வைரஸ் உலக நாடுகள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் கலந்து கொண்டு தங்களது ஆலோசனையை வழங்கின. இந்த நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர், தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சீனாவில் கடந்த 2020ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகத்தையே ஆட்டி படைத்தது. லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது. இந்தியாவில் 3 அலைகளாக மிரட்டிய கொரோனா வைரஸ் வைரசால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றிலும் முடங்கியது. கொரோனாவில் இருந்து மீண்டு உலக மக்கள் சகஜ நிலைக்கு படிப்படியாக திரும்பி வரும் நிலையில் சீனாவில் பி.எப்.7 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இந்த கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. பி.எப்.7 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் சிலரை பாதித்து இருப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவும் என எச்சரிக்கப்பட்டு உள்ளதால் பொது மக்களும் அலட்சிய போக்குடன் இல்லாமல் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தற்போது புத்தாண்டு போன்ற பண்டிகைகள் வருவதால் பொது மக்கள் அதிக அளவில் ஒன்று கூடுவதை தவிர்த்து, சமூக இடைவெளியை பின்பற்றி பண்டிகைகளை தங்களுடைய குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும்.

இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும். மேலும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை தவிர பொது மக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை சானிடைசர் மூலம் சுத்தம் செய்வது போன்ற கொரோனா வழிக்காட்டு முறைகளை மீண்டும் நடை முறைப்படுத்த தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.