உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு ரத்து: ஐகோர்ட்டு

உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டு அறிவிப்பாணையை ரத்து செய்து அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

உத்தரபிரதேசத்தில் 17 மாநகராட்சிகள், 200 நகராட்சிகள், 545 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அவற்றில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓ.பி.சி.) இடஒதுக்கீடு வழங்குவதற்கான அறிவிப்பாணையை கடந்த 5-ந் தேதி உத்தரபிரதேச அரசு பிறப்பித்தது. அந்த இடஒதுக்கீடு, சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்த வழிமுறைகளுக்கு எதிராக உள்ளதாகவும், அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி, அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ கிளையில் வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை விசாரித்த ஐகோர்ட்டு, ஓ.பி.சி.க்கு இடஒதுக்கீடு அளிக்கும் அறிவிப்பாணையை ரத்து செய்து நேற்று உத்தரவிட்டது.

இடஒதுக்கீடு இல்லாமல், ஜனவரி 31-ந் தேதிக்குள் தேர்தல் நடத்துமாறு கூறியுள்ளது. அதே சமயத்தில், இடஒதுக்கீட்டுக்கு வழி கண்டுபிடித்த பிறகுதான் தேர்தல் நடத்துவோம் என்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.