உரம் வாங்க சாதி விவரங்களைக் கேட்பதை மத்திய அரசு கைவிட வேண்டும்: அன்புமணி

அரசின் உர மானியம் கிடைப்பதற்கு விவசாயிகளின் சாதி விவரங்கள் கேட்கப்படுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன், உரம் வாங்க சாதி விவரங்களைக் கேட்கும் மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் பாமக அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

உரம் விநியோகத்துக்கு சமீபத்தில் மத்திய அரசு புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. அதாவது உரம் தேவைப்படும் விவசாயிகள் ஆதார் அட்டையுடன் தங்கள் சாதி விவரத்தையும் குறிப்பிட வேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட விவசாயி பொதுப்பிரிவு, ஓபிசி, எஸ்சி, எஸ்டி இதில் எந்த பிரிவை சேர்ந்தவர்கள் என்ற விவரத்தை பதிவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. இவைகள் உரம் வாங்கும் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது. காரணம், ஒவ்வொரு சாதிக்கு ஏற்றபடி உர மானியம் விடுக்கப்படும் பட்சத்தில் திட்டமிட்டு சாகுபடி பரப்பை பறிக்கும் செயலாக விவசாயிகள் கருதுகிறார்கள். மேலும் தனியாரை ஊக்குவிக்க இப்படியான நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் தங்கள் சந்தேகத்தை தெரிவித்து வருகிறார்கள். இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்று கூறும் அரசு, அதையே நசுக்குவதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள். எனவே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சாதி பிரிவை குறிப்பிடும் நடைமுறையை கைவிட வேண்டும் என்றும் கேட்டு கொண்டு வருகிறார்கள்.

அரசின் உர மானியம் கிடைப்பதற்கு விவசாயிகளின் சாதி விவரங்கள் கேட்கப்படுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான கண்டனமும் தெரிவித்துள்ளது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

மானியத்துடன் கூடிய உரங்களை உழவர்கள் வாங்கும்போது, அவர்கள் சாதி பிரிவைத் ( பொது/ஓபிசி/எஸ்.சி/எஸ்.டி) தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என்று நடுவண் உரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உர விற்பனைக் கருவியின் மென்பொருளில் இதற்கான வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது உழவுத் தொழில் சாதியின் அடிப்படையில் நடைபெறவில்லை. உர மானியமும் சாதியின் அடிப்படையில் வழங்கப்படவில்லை. நடுவண் அரசு அவ்வாறு இருக்கும் போது உர மானியம் வழங்குவதற்கான சாதிப் பிரிவுகளை கோருவது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. நடுவண் அரசின் இந்த விதி உழவர்களை காயப்படுத்தியுள்ளது. உர மானியம் பெறுவோரின் சாதிப் பிரிவுகளை அறிந்து அவற்றின் அடிப்படையில் உர மானியம் வழங்க நடுவண் அரசு திட்டமிட்டிருக்கிறதோ என்ற ஐயம் உழவர்கள் நடுவே ஏற்பட்டிருக்கிறது. உழவர்களின் இந்த ஐயத்தை உடனடியாக போக்க வேண்டியது நடுவண் அரசின் கடமை.

உழவுத் தொழில் புனிதமானது; அனைவருக்கும் பொதுவானது. அதற்கான உர மானியம் பெறும் உழவர்களை சாதியின் அடிப்படையில் பார்ப்பது தவறு. எனவே, உரம் வாங்கும் உழவர்களின் சாதிப் பிரிவை கோரும் கூறை விற்பனைக் கருவியின் மென் பொருளில் இருந்து நீக்க நடுவண் அரசு நீக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி பதிவிட்டுள்ளார்.