பொறுமை, சகிப்பு தன்மை மக்களிடையே குறைந்த காலத்தில் வாழ்கிறோம்: நீதிபதி சந்திரசூட்

பொறுமை, சகிப்பு தன்மை ஆகியவை மக்களிடம் குறைந்த காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார்.

டெல்லியில் நடந்த சர்வதேச மயமாக்கல் காலத்தில் சட்டம் பற்றிய நிகழ்ச்சி ஒன்றில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

யாரேனும் சிலரால் கேலிக்கு ஆளாக நேரிடுமோ என்ற அச்சத்துடனேயே, நாங்கள் செய்ய கூடிய ஒவ்வொரு சின்ன விசயத்திலும் ஈடுபடுகிறோம். நான் கூறும் இந்த விசயங்களை நம்புங்கள். அப்படி, உங்களை கிண்டல் செய்கிறவர்கள், உங்களுடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்வதில்லை. நாம் தற்போது வாழும் காலத்தில், மக்களிடையே பொறுமை குறைவாக உள்ளது. அவர்களிடம் சகிப்பு தன்மையும் வெகுவாக குறைந்து உள்ளது. அவர்களுக்கு பொறுமை குறைவாக உள்ளது என கூறும்போது, நான் சுருக்கமுடன் பேச வேண்டும் என அது எனக்கு நினைவூட்டுகிறது. ஆனால், மக்களிடம் சகிப்பு தன்மையும் குறைவாகவே உள்ளது. ஏனெனில் நாம், நம்மிடம் இருந்து வேறுபட்ட கருத்துகளை ஏற்று கொள்ள நாம் தயாராகவே இருப்பதில்லை.

சமூக ஊடகத்தில், குறிப்பிடும்படியாக உலகின் மிக பெரிய குறுஞ்செய்திகளை பதிவிடும் டுவிட்டர் வலைதளத்தில், கேலி கிண்டல்கள் செய்யும் பிரச்சனைகள் கடுமையாக உள்ளன. அவற்றை தடுத்து நிறுத்துவதற்கு கடுமையான சோதனைகள் மற்றும் நடைமுறைகள் இருந்தபோதும், யார் வேண்டுமென்றாலும் அது போன்ற நபர்களால் இலக்காக கொள்ளப்பட கூடிய சூழல் உள்ளது. இதுபோன்ற கேலி, கிண்டல்கள் செய்யப்படுவது சில சமயங்களில் மனித தாக்குதல்களில் கூட முடிந்து விடுகிறது. சமூக ஊடகத்தில், நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் உள்பட ஒவ்வொரு விசயத்திலும் தாக்குதல்கள் நடத்தப்படும் விசயங்களை கவனத்தில் கொண்டு, கடந்த 2017-ம் ஆண்டில் அவற்றில் ஒழுங்குமுறை தேவை என சுப்ரீம் கோர்ட்டு ஒப்பு கொண்டது. நீதிமன்ற நடவடிக்கைகளை பற்றி தவறான தகவல்களை பரப்ப சமூக ஊடகங்களை மக்கள் பயன்படுத்தும் பிரச்சனையையும் சுப்ரீம் கோர்ட்டு அடையாளம் கண்டு கொண்டது. சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டில் பெண் நீதிபதிகளை கூடுதலாக நியமனம் செய்வது பற்றிய விவகாரத்தில், நிச்சயம் அதனை ஆதரிக்கிறேன். ஆனால் அது ஒரு சற்று சிக்கலான விசயம். இவ்வாறு அவர் கூறினார்.