தாம்பரம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தால் மருத்துவ பிரதிநிதி தற்கொலை!

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்தை இழந்த மருத்துவ பிரதிநிதி ஒருவர் சென்னையில் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏராளமானோர் பணத்தை இழந்து வருகிறார்கள். ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழப்பதால் பெரும்பாலானோர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். எனவே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பலரும் வற்புறுத்தி வந்தனர். இதையடுத்து தமிழக சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்கு கவர்னர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்தை இழந்த மருத்துவ பிரதிநிதி ஒருவர் சென்னையில் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தாம்பரத்தை அடுத்த கணபதிபுரம் கோபால் தெரு மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 37). இவர் பி.பார்ம் படித்துவிட்டு மருத்துவ பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி லதா என்ற மனைவியும், பிரணவ், தர்ஷன் என 2 மகன்களும் உள்ளனர். மேலும் வீட்டில் தாயார் தமிழ்செல்வியும் வசித்து வருகிறார். வினோத்குமாரின் மனைவி லதா தாம்பரத்தில் உள்ள தனியார் மருந்தகத்தில் வேலை பார்த்து வருகிறார். வினோத் குமாருக்கு ஆன்லைன் மூலம் சூதாட்டம் ஆடும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. சூதாட்டத்துக்காகவும் மற்றும் குடும்ப செலவுக்காகவும் இணைய தளங்களில் உள்ள ஆப்கள் மூலம் சுமார் 20 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார். இந்த நிலையில் கடன் கொடுத்த தனியார் ஆப் நிறுவனங்கள் தொடர்ந்து கடனை திருப்பி செலுத்த வற்புறுத்தி நெருக்கடி கொடுத்து வந்தது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாகவே வினோத்குமார் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை வீட்டில் இருந்த வினோத்குமார் தனது தாயார் தமிழ்செல்வியை அழைத்து தனக்கு தூக்கம் வருவதாகவும், அதனால் தான் தூங்கச் செல்வதாகவும் குழந்தைகளை கடைக்கு அழைத்து சென்று தின்பண்டம் வாங்கி கொடுக்கும்படி கூறினார். குழந்தைகளுடன் தாயார் வெளியே சென்ற போது வினோத்குமார் அறைக்கு சென்று புடவையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்த லதா தனது கணவர் இருந்த அறைக்கு செல்வதற்காக திறந்த போது மின்விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது இதுகுறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வினோத்குமார் பிணத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கணவர் வினோத் குமார் தற்கொலை தொடர்பாக அவரது மனைவி கூறுகையில், என் கணவர் மனதில் என்ன குழப்பினாரோ தெரியவில்லை. இந்த ரம்மி விளையாட்டால் ஊரை சுற்றி கடனாகிவிட்டது. இதில் இருந்து என்னால் மீண்டு வர முடியவில்லை. என் சாவே கடைசியாக இருக்க வேண்டும். தயவு செய்து தடை செய்ங்கடா என்று எழுதி வைத்துவிட்டு, எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு உயிரிழந்துவிட்டார். என் குழந்தைகளுக்கு அப்பா இல்லை என்று தெரியாது. அப்பா எங்கே என்று கேட்டால் என்ன சொல்லுவேன்.

6 மாதமாகவே ஆன்லைன் ரம்மி விளையாடுவது தெரியும். என்னிடம் மறைத்து ஆன்லைன் ரம்மி விளையாடி இருக்கிறார். அது எனக்கு தெரியாமல் போய்விட்டது. எங்களிடம் ரூ.20 லட்சம் கடன் என்று கூறியுள்ளார். ஆனால் எவ்வளவு கடன் என்று அவருக்கு மட்டும்தான் தெரியும். எல்லா லோன் ஆப்களிலும் கடன் வாங்கியுள்ளார். எல்லாம் இந்த ரம்மியால் தான். காசு இல்லையென்றால் விட்டுச் சென்றிருக்கலாம். காசு, காசு என்று பிடுங்கி ரம்மி, எல்லாத்தையும் எடுத்துக் கொண்டது. ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானதால், மருத்துவமனைக்கு கூட கூட்டிச் சென்றேன். ஆனால் என்னிடம் மறைத்து மறைத்து விளையாடியுள்ளார். கடன் வாங்கி, கடனை அடைக்க என்று மீண்டும் மீண்டும் ரம்மி விளையாடியுள்ளார். பார்க்கும் லோன் ஆப்களில் எல்லாம் கடன் பெற்றுள்ளார். கண்ணை மூடிக் கொண்டு கடன் கொடுத்துள்ளார்கள். குடும்ப சூழல் என்ன, கடனை திரும்பி கொடுக்க முடியுமா என்று எதுவும் தெரியாமல் கடன் கொடுத்துள்ளார்கள். அத்தனை புரூஃப் கேட்டுள்ளார்கள். உயிர் குடிக்க மட்டும் புரூஃப் இல்லையா.. என் பிள்ளை 2ம் வகுப்பு தான் படிக்கிறான். இனிமேல் யாரும் இதுபோல் தப்பு செய்யாதீர்கள். கடன் வாங்கி அடைக்க முடியாமல் தான் என் கணவர் உயிரிழந்துள்ளார். இந்த ரம்மி இன்னும் உயிரை வாங்கி கொண்டு தான் இருக்குமா? தூக்குபோடும் அளவுக்கு எப்படி தெம்பு வந்ததோ தெரியவில்லை. இன்னும் எத்தனை பேர் உயிர வாங்க போறாங்கனு தெரியல என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.