திமுக ஆட்சியைக் கவிழ்க்க மற்றவர்கள் சதி செய்ய வேண்டியதில்லை: வானதி சீனிவாசன்!

திமுக ஆட்சியைக் கவிழ்க்க மற்றவர்கள் சதி செய்ய வேண்டியதில்லை. அதற்கு அவர்களே தகுதியானவர்கள் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

கோவை மக்கள் சேவை மையம் மற்றும் பாலம்மாள் தொண்டு நிறுவனம் இணைந்து ஆயிரம் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் மற்றும் அதற்கான பயிற்சி வகுப்பு துவக்க விழா நியூ சித்தாபுதூரில் உள்ள பாலம்மாள் தொண்டு நிறுவனத்தில் நடைபெற்றது. முதல் கட்டமாக 25 பெண்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து மகளிர் தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். பின்னர் வானதி சீனிவாசன் கூறியதாவது:-

சாதாரண பெண்மணிகளுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியவர் பிரதமர். அடிமட்டத்தில் வாழ்க்கையினுடைய போராட்டத்தில் தங்களுக்குரிய தேவைகளை கூட பெற்றிடாத கோடிக்கணக்கான பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியதற்காக பாஜக மகளிர் அணி சார்பில் இன்றைய மகளிர் தினத்தில் எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அடிப்படை தேவைகள் மட்டுமல்லாமல் பெண்களுக்கான உடல் நலத்திற்கான பல்வேறு திட்டங்கள், பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டங்கள், ராணுவத் துறையில், அறிவியல் துறையில் பெண்களுக்கு உயர் பொறுப்புகளை வழங்கி பெண்கள் தலைமை ஏற்கின்ற மாற்றத்தை ஏற்படுத்தி வருபவர் பிரதமர். பெண்களை முன்னேற்றுவது மட்டுமல்லாமல் பெண்கள் தலைமையிலான முன்னேற்றம் என்பதிலும் மத்திய அரசு தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வேலையில் பிரதமரின் திட்டங்களை நாடு முழுவதும் எடுத்துச் செல்வதில் மகளிர் அணி மகிழ்ச்சி கொள்கிறது. இதன் வாயிலாக லட்சக்கணக்கான பெண்களை நேரடியாக சந்திப்பதற்கும் அவர்களுக்கு உத்வேகம் அளிப்பதற்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக தொடர் முயற்சித்து வருகிறோம்.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு சுயம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதற்கு முன்பாக இரண்டு வயது வரை இருக்கக்கூடிய இளம் குழந்தைகளுக்கு பசும்பால் வழங்கக்கூடிய அமுதம் திட்டம், இளம்பெண்களுக்கு மாதம் தோறும் சானிட்டரி நாப்கின் வழங்குகின்ற திட்டம், ஒவ்வொரு வாரமும் மருத்துவ முகாம் நடத்துகின்ற நலம் திட்டம் என்கின்ற வகையில் இன்று தெற்கு சட்டமன்றத் தொகுதியில் பெண்களுக்காக சுயவேலை வாய்ப்பை வழங்கும் விதமாக சுயம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம். இதன் வாயிலாக ஆயிரம் பெண்களுக்கு இலவசமாக தையல் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு இலவசமாக தையல் இயந்திரம் வழங்க உள்ளோம். அந்த வகையில் இன்று 25 பெண்களுக்கு முதல் கட்டமாக இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

கோவையில் இருக்கக்கூடிய தெற்கு தொகுதி மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் இருக்கின்ற பெண்களும் இந்த உதவி வேண்டும் என கேட்கிறார்கள். எனவே அவர்கள் இருக்கின்ற பகுதியிலும் இது போன்ற பயிற்சி அளிப்பதற்கு 12 மையங்களை கண்டறிந்துள்ளோம். அவர்களுக்கு கிட்டத்தட்ட 2000 ரூபாய் மதிப்பிலான தையல் பயிற்சி இலவசமாக நிறுவனங்கள் வாயிலாக நடத்துவதற்கு பாலம்மாள் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் உதவியோடு இந்த பயிற்சியை மேற்கொள்ள இருக்கிறோம். அதன் பின்பு தையல் இயந்திரம் வழங்குவதற்கு கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி என்கின்ற சமூக முன்னேற்றத்தில் பங்கேற்கின்ற நிறுவனங்கள் வாயிலாக தையல் இயந்திரம் வழங்க உள்ளோம். தற்போது வரை 250 பெண்கள் நேரடியாக பதிவு செய்துள்ளார்கள். எட்டு மணி நேரம் வழங்கப்படுகின்ற இந்த பயிற்சி 2 பிரிவுகளாக நடத்தப்படும். அதோடு மட்டுமில்லாமல் பாஜக மகளிர் அணி சார்பாக சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்களுடைய துறையில் சிறப்பாக பணியாற்றும் 10 பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு சுஷ்மா சுராஜ் பெயரில் விருது வழங்கக்கூடிய நிகழ்ச்சியும் இன்று நடைபெற்று வருகிறது. மகளிர் அணி சார்பாக வரக்கூடிய ஒரு வருட காலத்திற்கு பாராளுமன்ற தேர்தலுக்கு மகளிர் அணியை தயார்படுத்துகின்ற விதமாக லட்சக்கணக்கான மகளிரை நேரடியாக சந்திப்பதற்கு ஏதுவாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறோம். மேலும் கோவை மாநகராட்சியில் பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் என்ற நிலைமை சென்று கொண்டிருக்கிறது. இதற்காக கோவை மாவட்ட தலைவர் தலைமையில் வரக்கூடிய நாட்களில் மக்கள் பிரச்சினைகள் குறித்து ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இப்பகுதியில் உள்ள தொழிலாளர்களுக்கு வடமாநிலத் தொழிலாளர்கள் திடீரென அவர்கள் ஊர்களுக்கு கிளம்பியதன் காரணமாக ஒரு பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் கடந்த இரண்டு நாட்களாக அவர்களுடைய தொழிலை தொடர முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். இன்னும் பல்வேறு இடங்களில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக பல்வேறு துறைகளில் இது எதிரொலித்து வருகிறது. ஆரம்பத்திலேயே தமிழக அரசு சரியாக கையாளததால் மிகப்பெரிய பூதாகரமான ஒன்றாக மாறியிருக்கிறது. அப்போதே புலம் பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த நிலை வந்திருக்காது. எனினும் தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பாஜக ஒத்துழைப்பு வழங்கும்.

2019 க்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளாட்சி தேர்தல் தவிர்த்து, வலுவாக தேர்தலை சந்தித்தது. நாடாளுமன்ற தேர்தலில் பெரிய அளவில் வெற்றியை ஈட்ட முடியவில்லை என்றாலும், சட்டமன்ற தேர்தலில் கணிசமான இடங்களை பிடித்து சட்டப்பேரவையில் ஆக்கபூர்வமான கூட்டணியாக செயல்படுகிறோம். ஒரு கட்சி கொள்கையை மற்றொரு கட்சி ஏற்க முடியாது. அதிமுக நிர்வாகிகள் மற்றும் பாஜகவில் இருந்து விலகியவர்கள் தலைமை பற்றி சொன்ன கருத்துகளால் கட்சிக்குள் இருப்பவர்களுக்கு மன வருத்தம் உள்ளது.
இதனால் உணர்ச்சிவசப்பட்டு சொல்லும் கருத்துகள் கூட்டணிக்குள் பாதிப்பை ஏற்படுத்தாது. சில எதிர்பாராத நிகழ்வுகள் நடந்துள்ளது. இருந்தாலும் பலமான கூட்டணியாக தேர்தலை சந்திப்போம். கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு எடுக்கும். தற்போது ஏற்பட்ட மனக்காயங்களை ஆற்றும் வாய்ப்புள்ளது.
அடுத்த தேர்தலில் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும். கட்சியில் இருந்து சில நபர்கள் செல்வது சாதாரண விஷயம். இதை கூட்டணிக்குள் பலவீனமாக்கும் முயற்சியாக பார்க்க வேண்டாம்.

திமுக ஆட்சியை கவிழ்க்க மற்றவர்கள் சதி செய்ய வேண்டியதில்லை. அதற்கு அவர்களே தகுதியானவர்கள். எதிர்கட்சிகளை பார்த்து முதலமைச்சர் பயப்பட வேண்டாம். அமைச்சர்கள், குடும்பத்தை பார்த்து தான் அவர் பயப்பட வேண்டும்.

அண்ணாமலையின் தைரியமான பேச்சு, வேகமான செயல்பாடு என்னை ஈர்க்கக்கூடியது. ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரோடு தன்னை ஒப்பிட்டது, தலைமை பண்பை வெளிப்படுத்தும் வகையில் தான். அதை திரித்து அவர்களின் பர்சனாலிட்டி உடன் ஒப்பிடுவது தவறு. கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் செயல்பாடுகளில் மாற்று கருத்து இருந்தாலும், அவர்களின் ஆளுமைகள் ஏதொவொரு வகையில் அனைவரையும் ஈர்க்கக்கூடியது. ஈரோடு இடைத்தேர்தலின் ஆரம்பத்தில் கூட்டணிக்குள் பிரச்சனை இருந்தது. பின்னர் அது சரியாகிவிட்டது. இந்த கூட்டணி நன்றாக உள்ளது. எந்த பிரச்சனையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.