ஆன்லைன் ரம்மியை பாஜக எதிர்க்கிறது: அண்ணாமலை

ஆன்லைன் ரம்மியை பாஜக எதிர்க்கிறது. பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணியில் மோதல் இல்லை என்று அண்ணாமலை கூறினார்.

மகளிர் தினத்தையொட்டி நேற்று கோவை சிட்ரா அரங்கில் ”பெண்மையை போற்றுவோம் – மாதர்களில் ஒற்றுமை மலரட்டும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது பெயருக்கு பின்னால் எம்.எல்.ஏ, எம்.பி. என்று போட நான் அரசியலுக்கு வரவில்லை. கட்சி வளர வேண்டும் என்பது தான் எனது இலக்கு. நேற்று நான் பேசிய எனது கருத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை. யாரும் போகாத பாதையில் பா.ஜ.க. பயணிக்கிறது. எங்களது பாதை தனித்தன்மையான பாதை. நான் இப்படி தான் இருப்பேன். நான் இருக்கும் வரை கட்சி இப்படி தான் இருக்கும். ஜெயலலிதாவுடன் என்னை ஒப்பிடவில்லை. எல்லோருக்கும் தனித்தன்மை இருக்கிறது. அட்ஜெஸ்ட் செய்து நான் அரசியல் செய்ய மாட்டேன்.

அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் எந்த சங்கடமும், வருத்தமும் இல்லை. உரசலும், மோதலும் இல்லை. நாங்கள் யாருக்கும் சாமரம் வீச மாட்டோம். ஆயிரக்கணக்கானோர் தினமும் பா.ஜ.க.வில் இணைகிறார்கள். ஒரு கட்சியில் பலர் இணைவதும், விலகுவதும் சகஜம். எங்கள் கட்சிக்கு ஆயிரம் பேர் வந்தால், நூறு பேர் போகிறார்கள். தி.மு.க. அமைச்சர்கள் பலர் அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர்கள்தான். ஒரு எம்.எல்.ஏ. பா.ஜ.க.வில் சேரலாம். இடைத்தேர்தல் வரும் என்று கருதி அதனை விரும்பவில்லை. தி.மு.க. அமைச்சர்கள் தவறாக பேசுவது புதிதல்ல. பொன்முடி தொடர்ந்து அதைத் தான் பேசி வருகிறார்.

ஆன்லைன் ரம்மியை பாஜக எதிர்க்கிறது. அதுதான் கட்சியின் நிலைப்பாடு. நான் கடைசியாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த போது கூட ஆன்லைன் ரம்மி விவகாரம் குறித்து வேண்டுகோள் வைத்தேன். ஆளுநரை பொறுத்தவரை ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தில் தான் தவறு உள்ளது என்று சொல்லி இருக்கிறார். இதன் மூலம் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை சரி செய்ய சட்டப்பேரவைக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒருவேளை மீண்டும் அதே மசோதாவை தமிழ்நாடு அரசு அனுப்பினால், ஆளுநருக்கு வேறு வழியில்லை. அதில் கையெழுத்து போட்டுதான் ஆக வேண்டும். அரசியலமைப்பு சட்டம் அதுதான். இரண்டாவது முறையாக ஆளுநர் கையெழுத்து போட மாட்டேன் என்று சொல்ல முடியாது. ஆனால் இதே சட்டத்தில் ஆளுநர் அது உயர்நீதிமன்றத்திலோ அல்லது உச்சநீதிமன்றத்திலோ தடை செய்யப்படும். ஏனென்றால் இதுவொரு தவறான தடை சட்டம். யாரையோ சமாதானம் செய்வதற்காக தவறான சட்டத்தை கொண்டு வந்து ஆளுநரை நிர்பந்திக்கக் கூடாது. ஆளுநர் திருப்பி அனுப்பிய ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவை பொதுவெளியில் வெளியிட வேண்டும். ஆளுநர் என்ன கருத்து சொல்லி இருக்கிறார் என்பதை பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.