பாஜகவினர் மத்தியில் ஆளும் திமிரோடு பேசக்கூடாது: செல்லூர் ராஜூ

பாஜகவினருக்கு சகிப்புத்தன்மை வேண்டும், வாயடக்கம் தேவை. வாய்க்கொழுப்போடு பேசக்கூடாது என செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் சமீபத்தில் வெளியேறி கூட்டணி கட்சியான அதிமுகவில் இணைந்தனர். இது தொடர்பாக இரு கட்சி தலைவர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். பாஜகவிலிருந்து விலகியவர்களை கூட்டணி தர்மத்தை மீறி அதிமுகவில் சேர்த்துக் கொண்டதைக் கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பாஜகவில் இருந்து ஆட்களை அழைத்துச் சென்றால் தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை உருவாகி உள்ளதாகவும், இது பாஜகவின் வளர்ச்சியை காட்டுகிறது என்றும் அண்ணாமலை கூறினார்.

இது தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-

எங்கள் கட்சியில் இருந்து சென்றவர்களை பாஜகவில் சேர்த்தபோது இனித்தது. இப்போது அங்கே இருந்து இங்கே வரும்போது கசக்கிறதா? பாஜகவினருக்கு சகிப்புத்தன்மை வேண்டும், வாயடக்கம் தேவை. வாய்க்கொழுப்போடு பேசக்கூடாது. மத்தியில் ஆளும் திமிரோடு பேசக்கூடாது. கூட்டணி கட்சிகள் தோளில் ஏறி உட்கார்ந்து காதை கடிப்பதையெல்லாம் அதிமுக பொறுத்துக் கொண்டிருக்காது. எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரிக்கும் அளவிற்கு தரம் தாழ்ந்து போய்விட்டார்கள். இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார்.