கோவையில் கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் கைது!

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆளுநர் ஆர்என் ரவிக்கு கருப்பு கொடி காட்ட முயன்றனர். இதையடுத்து அங்கிருந்த போலீசார் சுமார் 50 க்கும் அதிகமானவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று அதிரடியாக கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழக கவர்னர் 5 நாள் பயணமாக 8-ந் தேதி ஊட்டிக்கு வந்தார். இன்று அவர் ஊட்டியில் இருந்து கார் மூலமாக கோவைக்கு வந்தார். பின்னர் கோவை ஈஷா யோகா மையத்திற்கு சென்ற அவர், கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்ல இருந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விழா ஒன்றில் பங்கேற்ற கவர்னர் ஆர்.என்.ரவி காரல்மார்க்ஸ் குறித்து இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் தமிழகத்தில் கவர்னர் செல்லும் இடங்களில் எல்லாம் கருப்பு கொடி காட்டுவோம் என அறிவித்தனர்.

இந்த நிலையில் ஊட்டியில் இருந்து இன்று சென்னை திரும்புவதற்காக கோவை விமான நிலையத்திற்கு கவர்னர் வருவதை அறிந்ததும், 50க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமையில் சிட்ரா சிக்னல் அருகே குவிந்தனர். அவர்கள் சாலையோரம் நின்றபடி கவர்னர் ரவிக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் போலீசார் கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற மாவட்ட செயலாளர் பத்மநாபன் உள்பட 50க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரை கைது செய்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை புறப்பட்டு சென்றார்.