நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசித்தை பிரதமரிடம் சொல்லிவிட்டு வந்தேன்: உதயநிதி ஸ்டாலின்!

தமிழ்நாட்டின் கல்வி உரிமைகள் பறிக்கப்படும் போது, தைரியமாக குரல் கொடுப்பதே நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். அமைச்சராகப் பொறுப்பேற்ற பின், முதல்முறையாக பிரதமர் மோடியை உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், பிரதமர் மோடியை சந்தித்தது மரியாதை நிமித்தமானது. டெல்லி வரும் போது தன்னை சந்திக்கும்படி பிரதமர் மோடி கூறியிருந்தார் அதன்படி இன்று அவரை சந்தித்தேன் எனத் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு மக்களின் மனநிலையை பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தேன். நீட் விலக்கு கேட்டபோது பிரதமர் மோடி சில விளக்கங்களைத் தந்தார். நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சட்டப் போராட்டம் தொடரும் என்று பிரதமரிடம் தெரிவித்தேன் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.

இந்த நிலையில் அரியலூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். 5 தளங்களை கொண்ட 700 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனையை திறந்து வைத்தார். மேலும், பல்வேறு துறைகள் சார்பில் 2,539 பயனாளிகளுக்கு ரூ.13.68 கோடியில் நலத்திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதனிடையே, அரியலூர் அரசு மருத்துவ கல்லூரியில் ரூ.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அரங்கிற்கு நீட் தேர்வை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தி உயிரிழந்த மாணவி அனிதாவின் பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த புதிய அரசு மருத்துவமனையை திறந்து வைத்து உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், எதிர்க்கட்சி தலைவர் நீட் தேர்வு ரத்து ரகசியம் பற்றி பேசுகிறார். அதில் எந்த ரகசியமும் இல்லை. தைரியமாக எங்கள் கல்வி உரிமை பறிக்கப்படும் போது குரல் கொடுப்பதே ரகசியம். இனி அனிதாவின் பெயரில் அமைக்கப்பட்ட அரங்கை பார்க்கும் போதெல்லாம் நீட் தேர்வு ரத்து தான் மனதில் ஓடும். நீட் தேர்வுக்கு எதிராக சட்டப் போராட்டம் எந்தவித சமரசமும் இன்றி தொடரும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். அதற்கு பல்வேறு விளக்கங்களை அவர் கொடுத்தார். நீட் தேர்வு எங்களுக்கு தேவையில்லை, நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடமும் கூறிவிட்டு வந்தேன் என்று தெரிவித்தார்.