பெட்ரோல் குண்டுவீச்சில் இறந்த டாஸ்மாக் ஊழியரின் குடும்பத்துக்கு மு.க.ஸ்டாலின் நிதியுதவி!

சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூரில் நிகழ்ந்த பெட்ரோல் பாட்டில் வீச்சு சம்பவத்தில் உயிரிழந்த டாஸ்மாக் நிறுவன பணியாளர் அர்ஜுனன் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதோடு அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு நிதியுதவியும் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூரில் கடந்த மார்ச் 3ஆம் தேதியன்று நிகழ்ந்த பெட்ரோல் பாட்டில் வீச்சு சம்பவத்தில் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர் அர்ஜுனன்(46) தீக்காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இச்சம்பவம் நடைபெற்றவுடன் டாஸ்மாக் நிறுவனம், உடனடியாக ரூ.3 லட்சம் நிதியுதவியாக அர்ஜுனன் குடும்பத்தினருக்கு வழங்கி, அனைத்து மருத்துவச் செலவுகளையும் ஏற்று அவருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அர்ஜுனனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்கிடவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடையவரை காவல் துறையினர் கைது செய்து, வழக்கு பதிவு செய்து உரிய மேல்நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.