நாட்டில் ஆபத்தில் இருப்பது காங்கிரஸ் கட்சிதான்: ஜே.பி.நட்டா

நாட்டில் ஆபத்தில் இருப்பது காங்கிரஸ் கட்சியே தவிர ஜனநாயகம் அல்ல என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் லண்டன் சென்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாஜக ஆட்சியின் கீழ் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாக குறிப்பிட்டு பேசி இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, ராகுல் காந்தியை கடுமையாக சாடி பேசியுள்ளார். இதுகுறித்து ஜே.பி.நட்டா பேசியதாவது:-

காங்கிரஸ் கட்சியினர் இப்போது எல்லா எல்லைகளையும் தாண்டிவிட்டார்கள். ராகுல் காந்தி இங்கிலாந்து சென்று இந்தியாவின் இறையாண்மை மீது கேள்வி எழுப்புகிறார். அவர் ஜனநாயகம் இங்கே முடிந்துவிட்டது என்று கூறுகிறார். சமீபத்திய சட்டசபைத் தேர்தலின் போது நாகாலாந்தில் காங்கிரஸ் பூஜ்ஜியமும், மேகாலயாவில் 5 இடங்களும், திரிபுராவில் 3 இடங்களும் கிடைத்தன. ஆபத்தில் இருப்பது ஜனநாயகம் அல்ல, உங்கள் கட்சி (காங்கிரஸ்) ஆபத்தில் உள்ளது.

இந்தியாவில் ஜனநாயகம் குறித்த பிரச்சினையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் தலையீட்டை நாடியதாகக் கூறப்படும் ராகுல் காந்தி போன்ற தலைவர்களை (அரசியலில்) இருக்க நாம் அனுமதிக்க வேண்டுமா? அவர்களை வீட்டில் உட்கார வைக்க வேண்டும். இந்திரா காந்தியின் தலைமையில் நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தியது அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசுதான். நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியதில் பிரதமர் நரேந்திர மோடி முக்கியப் பங்காற்றியுள்ளார். காங்கிரஸ் தலைவர்கள் ஊழல், கமிஷன், கிரிமினல் மயமாக்கலில் ஈடுபட்டுள்ளனர். பிரித்து ஆட்சி செய்வதே அவர்களின் கொள்கை. ஆனால் பொறுப்பான தலைமையுடன் பிரதமர் அரசியலைத் தொடங்கிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.