தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிகவும் சீர்கெட்ட நிலையில் இருந்து வருகிறது: பிரேமலதா விஜயகாந்த்!

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிகவும் சீர்கெட்ட நிலையில் இருந்து வருகிறது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் பகுதியில் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கோவில் தேமுதிக கட்சியின் மாநில பொருளாளர் பிரேமலதா தனது பிறந்த நாளை முன்னிட்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா கூறியதாவது:-

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிகவும் சீர்கெட்ட நிலையில் இருந்து வருகிறது. அதற்கு மதுபான கடைகள் மற்றும் போதை பொருட்களின் விற்பனை அதிகரிப்பே காரணம். இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள் முதற்கொண்டு அனைவரும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இந்திய நாடு ஒரு கலாச்சாரமான நாடு, தற்போது சூழ்நிலையில் அவை கேள்விக்குறியாகி வருகிறது. ஆட்சியாளர்கள் இரும்பு கரத்தை கொண்டு சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின் செங்கல் திருடன் என விமர்சித்ததை போல, எடப்பாடி கே பழனிச்சாமி மீது திருட்டு விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற விமர்சனங்கள் அவர்களது தரத்தை தாழ்த்திக் கொள்கிறது. வழக்குத் தொடுப்பதற்கு முகாந்திரம் இருக்க வேண்டும், முகாந்தாரம் இன்றி வழக்குத் தொடுப்பதற்கான காரணம் அரசியல் காழ்ப்புணர்ச்சி தான்.

உதயநிதி ஸ்டாலின் அடுத்த முதல்வர் என அமைச்சர்கள் தெரிவித்து வரும் கருத்துக்கு அக்கட்சியினர் தான் முடிவு எடுக்க வேண்டும். ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வரமாட்டார் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் ஆக்கப்பட்டு இருக்கிறார். எனவே மக்கள் தான் விழிப்புடன் செயல்பட்டு முடிவெடுக்க வேண்டும். இடைத்தேர்தலில் வாக்கு சதவீதம் தேமுதிகவிற்கு குறைந்திருப்பதாக தெரிவிக்கும் கருத்து முதலாவது தவறு. வாக்காளர்களுக்கு பணத்தை வழங்கி வெற்றி பெற்றது ஒரு வெற்றியா.? தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம், இந்த இடைத் தேர்தல் வெற்றியின் மூலம் வாக்கு சதவீதத்தை நிர்ணயிக்க முடியாது. கலைஞர், ஜெயலலிதா ஆகியோரும் தேர்தலில் வெற்றி தோல்வியை சந்தித்தவர்கள் தான். அடுத்த தேர்தலில் தேமுதிக தங்களது முழு வாக்கு பலத்தை வெளிப்படுத்தும்.

தமிழகத்தில் திமுக அதிமுக கட்சிகளுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி தான் என கருத்து தெரிவிப்பது அரசியலில் ஒன்றும் இல்லை. மேலே இருப்பவர்கள் கீழே வருவதும், கீழே இருப்பவர்கள் மேலே போவதும் நடக்கக்கூடியது தான். தேமுதிகவின் விஸ்வரூப வெற்றியை விரைவில் காண போகிறீர்கள். அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தால் அண்ணாமலை பதவி விலகுவது குறித்த கருத்துக்கு அண்ணாமலை தான் பதில் அளிக்க வேண்டும். தேமுதிகவினர் பாஜகவுடன் கூட்டணியில் இல்லை. இவ்வாறு பிரேமலதா கூறினார்.